நிலநடுக்கத்தால் துருக்கியில் மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன... கவிதை மூலம் கண்ணீர் சிந்திய வைரமுத்து

First Published Feb 8, 2023, 8:39 AM IST

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களுக்காக கவிஞர் வைரமுத்து கண்ணீர்மல்க கவிதை ஒன்றை எழுதி உள்ளார்.

துருக்கியில் கடந்த பிப்ரவரி 6-ந் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு அடுக்குமாடி கட்டிடங்களும், வணிக வளாகங்களும் இடிந்து தரைமட்டம் ஆகின. அதுமட்டுமின்றி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உலகையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நிலநடுக்கத்தால் உருகுலைந்து போன துருக்கிக்கு உலக நாடுகள் தங்களது உதவிக்கரங்களை நீட்டி வருகின்றன. குறிப்பாக இந்தியா முதல் நாடாக நேற்று துருக்கிக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா நியூசிலாந்து உள்பட ஏராளமான நாடுகள் நிவாரண பொருட்களை அனுப்பி தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... Turkey Earthquake:துருக்கி, சிரியா நிலநடுக்க பலி 4 ஆயிரத்தைக் கடந்தது: 20ஆயிரமாக அதிகரிக்க வாய்ப்பு-WHO

துருக்கியை போல் சிரியாவும், இந்த நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. ஏற்கனவே உள்நாட்டு போரால் உருகுலைந்து போன சிரியா அதிலிருந்து படிப்படியாக மீண்டு வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கமும், அதனால் ஏற்பட்ட சேதங்களும் அந்நாட்டு மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, நிலநடுக்கத்தால் சின்னாபின்னமான துருக்கி குறித்து கண்ணீர் மல்க கவிதை ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கவிதை இதோ...

“துருக்கியின் கீழே
பூமி புரண்டு படுத்துவிட்டது

ரிக்டர் கருவிகள்
வெடித்துவிட்டன

வான்தொட்ட கட்டடங்கள்
தரைதட்டிவிட்டன

மனித உடல்கள் மீது
வீடுகள் குடியேறிவிட்டன

மாண்டவன் மானுடன்;
உயிர் பிழைத்தவன்
உறவினன்

உலக நாடுகள்
ஓடி வரட்டும்

கண்ணீர்
சிவப்பாய் வடியும் நேரம்”

இதையும் படியுங்கள்... துருக்கி விமான நிலையத்தை இரண்டாகப் பிளந்த நிலநடுக்கம்

click me!