பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் லால் சிங் சத்தா. இது பாரஸ்ட் கோம்ப் என்கிற ஆங்கிலப் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் அமீர்கானுக்கு ஜோடியாக நடிகை கரீனா கபூர் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகி உள்ளார். இதில் அமீர்கானும், நாக சைதன்யாவும் ராணுவ வீரர்களாக நடித்துள்ளனர்.
அட்வைத் சந்தன் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தியில் உருவாகி உள்ள இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். குறிப்பாக இப்படத்தை தமிழில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிட உள்ளது.
இந்நிலையில், நேற்று சென்னையில் லால் சிங் சத்தா படத்தின் பிரஸ் மீட் நடந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின், அமீர்கான், நாக சைதன்யா ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது உதயநிதியிடம் பத்திரிகையாளர் ஒருவர், 60 ஆண்டுகளாக இந்தி திணிப்பை தமிழகம் எதிர்த்து வருகிறது. இந்தி தெரியாது போடானு சட்ட போடுறோம், பானி பூரி விற்பவர்களை கிண்டல் செய்கிறோம். ரெட் ஜெயண்ட் ரிலீஸ் செய்யும் முதல் இந்தி படம் இதுதான். இதற்கு நிறைய விமர்சனங்கள் வரும், அதனை எப்படி பார்க்குறீங்க, இந்த படத்தை எப்படி ரிலீஸ் செய்ய சம்மதிச்சீங்க என கேட்டார்.
இதற்கு பதிலளித்த உதயநிதி, “இந்தி தெரியாது போடானு சொன்னது, இந்தி திணிப்புக்கான எதிர்ப்பு தானே தவிர, இந்தி மொழி கற்றுக்கொள்ள கூடாதுனு சொன்னதே இல்ல. வேணும்னா கத்துக்கலாம். யாராவது கத்துக்கிட்டு தான் ஆகனும் சொன்னால் அதை எதிர்ப்பது தான் திமுக-வின் கொள்கை. மொழியை தவிர அமீர்கானின் நடிப்புக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அதனால் தான் இந்த படத்தை வெளியிடுகிறோம்” என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... கர்ப்பமான மகள்... மீண்டும் தாத்தா ஆகிறார் ரஜினிகாந்த் - உற்சாகத்தில் சூப்பர்ஸ்டார் குடும்பம்