Aryan Khan: ஷாருகான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் கொடுக்க இது தான் காரணம்! உயர் நீதிமன்ற தீர்ப்பில் தகவல்!

First Published Nov 20, 2021, 7:08 PM IST

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் (Shah Rukh khan) மகன் ஆர்யன் கானுக்கு (Aryan Khan) பல கட்ட போராட்டத்திற்கு பின்னர் கடந்த மாதம் ஜாமீன் கிடைத்த நிலையில், உயர் நீதிமன்றம் ஏன்? ஜாமீன் கொடுத்தது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மும்பையில்  இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில், போதை மருந்து பார்ட்டி கொண்டாடியதாக, அக்டோபர் 3 ஆம் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால், ஷாருகான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்கு பின்னர், அக்டோபர் 8 ஆம் தேதி மும்பை ஆதார் சாலை சிறையில் அடைக்கப்பட்டனர்.

 ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வந்த திரைப்படம், அக்ஷய் குமாருடன் நடிக்க இருந்த விளம்பரப்படம் என அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு மும்பை வந்து சேர்ந்தார் ஷாருகான்.

பல முறை மகனை வெளியே கொண்டு வர நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த போதும், அவை நிராகரிக்கப்பட்டது. இது ஷாருகானை மட்டும் இன்றி அவரது குடும்பத்தினரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

ஷாருகான் சரியான சாப்பாடு தூக்கம் இன்றி வீட்டிற்குள்ளேயே முடங்கினார். கௌரி கான் தன்னுடைய மகன் வெளியே வந்த பிறகு தான் இனிப்புகள் வீட்டில் தயாரிக்கப்பட வேண்டும் என ஆர்டர் போட்டார். ஆர்யனின் சகோதரி சுகானா தன்னுடைய சகோதரரை பற்றி கவலை பட்டு கொண்டு அடிக்கடி போன் போட்டு விசாரித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. சுமார் 3 வாரத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

தற்போது ஆர்யன் கான் ஏன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்று உயர் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

அதில் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சண்ட், முன்முன் தமாசா ஆகியோர் போதைப்பொருள் தொடர்பான சதியில் ஈடுபட்டதற்கான எந்த வித ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போதை பொருள் வழக்கில் ஈடுபட்டதாக கூறப்படும் இவர்கள், அந்த கப்பலில் பயணம் செய்தார்கள் என்பதற்காக இந்த சதியில் ஈடுபட்டார்கள் என கூறமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் விசாரணை அதிகாரி பதிவு செய்ததாக கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலம் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது இணைக்கப்படவில்லை என்பதால் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அறிக்கையை நம்ப முடியாது என்றும் நீதிபதி தனது ஜாமீன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!