
தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது ஜன நாயகன் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கெளதம் மேனன், மமிதா பைஜு, டிஜே அருணாச்சலம் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை கேவிஎன் புரெடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இப்படம் வருகிற 2026-ம் ஆண்டு ஜனவரி 9ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும்.
ஜன நாயகன் படத்தில் நடித்து முடித்த பின்னர் சினிமாவை விட்டு விலக உள்ளதாக அறிவித்துள்ள விஜய், முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி உள்ள விஜய், வருகிற 2026-ம் ஆண்டு அக்கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக களமிறங்க உள்ளார். தற்போது அரசியல் பணிகளில் ஈடுபட்டுள்ள விஜய், வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். முதற்கட்டமாக 100 ஊர்களுக்கு செல்ல உள்ள அவர், தன்னுடைய பயணத்தை தஞ்சாவூரில் இருந்து தொடங்க திட்டமிட்டு இருக்கிறாராம்.
நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் பயணத்திற்காக சினிமாவை விட்டு விலக உள்ளதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த முடிவு சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பாக தான் கருதப்படுகிறது. ஏனெனில் தற்போதைய சூழலில் தமிழ் சினிமாவில் அதிக வருவாய் ஈட்டித் தரும் ஹீரோ என்றால் அது விஜய் தான். அவர் படம் சுமாராக இருந்தாலும் அதற்கு குறைந்தது பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி வசூல் கிடைத்துவிடும். அதனால் அவரை நம்பி பல கோடிகளை கொட்ட தயாரிப்பாளர் வரிசையில் நின்றாலும், விஜய்யின் முடிவு பலருக்கும் பேரதிர்ச்சியாகவே உள்ளது.
அதுமட்டுமின்றி தன்னுடைய கெரியரின் உச்சத்தில் இருக்கும் விஜய், தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார். அவருடைய கடைசி படத்திற்காக அவருக்கு ரூ.275 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இதுவரை எந்த ஒரு இந்திய நடிகரும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியதில்லை. ரஜினி, ஷாருக்கான், அமீர்கான் போன்ற நடிகர்கள் எல்லாம் லாபத்தில் பங்கு கேட்பார்கள் ஆனால் தனக்கு அதில் ஒரு சதவீதம் கூட வேண்டாம் எனக்கூறி 275 கோடி சம்பளம் பெற்றிருக்கிறாராம் விஜய்.
ஜன நாயகன் விஜய்யின் கடைசி படம் என்பதால் அப்படத்திற்கு பான் இந்தியா அளவில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அது அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸிலும் எதிரொலிக்கிறது. அதன்படி ரிலீசுக்கு முன்பே அப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் பெரும் தொகைக்கு விற்பனை ஆகி உள்ளன. அதன்படி ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.121 கோடிக்கும், சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி நிறுவனம் ரூ.55 கோடிக்கும் கைப்பற்றி இருக்கின்றன. இதுதவிர ஆடியோ உரிமம், திரையரங்க உரிமம், ஓவர்சீஸ் உரிமம் ஆகியவைக்கும் பெரும் டிமாண்ட் உள்ளதால், இப்படம் ரிலீசுக்கு முன்பே பட்ஜெட்டை விட அதிகம் வசூலித்துவிடும் என கூறப்படுகிறது. இதனால் ரிலீசுக்கு முன்னரே பிளாக்பஸ்டர் ஆன படமாக ஜன நாயகன் கருதப்படுகிறது.