சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் நடிகர் சூர்யாவின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. தற்போது ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார் சூர்யா. தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சூர்யா. அப்படத்தின் பணிகள் தற்போது படு ஜோராக நடைபெற்று வருகிறது. இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது.
தற்போது நடிகர் சூர்யா, பிரபல மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியிடம் கதை ஒன்றை கேட்டுள்ளாராம். இந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போனதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் இயக்கத்தில் சூர்யா நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லிஜோ ஜோஸ் பெல்லிசேரி அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் ஆவார். இதில் ஜல்லிக்கட்டு படத்துக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. மம்முட்டி, ரம்யா பாண்டியன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து சூர்யா படத்துக்கான பணிகளை அவர் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.