
பாடகி சுவர்ணலதா என்றதும், அவர் ஒரு பாடகி தானே என்று ... பலரும் நினைப்பார்கள், ஆனால் இவருடைய வாழ்க்கை பல கஷ்டங்களும், துயரங்களும் அடங்கியது. என்ன தான் உடன் பிறந்தவர்கள் இருந்தாலும், பெத்த... அம்மா - அப்பா இருந்திருந்தா உனக்கு மணக்கோலம் போட்டு உன் மனதுக்குள் எங்கே பூட்டி வைத்திருந்த திருமண ஆசைக்கு விடை கொடுத்திருப்பார்கள் என்பதே சுவர்ணலதா பற்றி பலர் ஆதங்கப்படும் ஒரு விஷயம். தன்னுடைய 14 வயதில் பாட ஆரம்பித்த இந்த சின்னச்சிறு குயில்... தன்னுடைய வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ளாமல், வெறும் 37 வயதிலேயே உயிரிழந்தது. பணம், புகழ்,ஆஸ்தி, அந்தஸ்து இருந்தும் இவரை காப்பாற்ற முடியாமல் போக என்ன காரணம்? என சுவர்ணலதா பற்றி பலரும் அறிந்திடாத சில தகவலை இங்கே பார்க்கலாம்.
சுவர்ணலதா, 7000-திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருந்தாலும், இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இவர் பாடிய 'எவனோ ஒருவன் வாசிக்கிறான்' என்கிற பாடல்... அந்த புல்லாங்குழலின் இசை மீது அமர்ந்து வெளிப்படுவது நம் உள்ளுணர்வை ஏதோ செய்துவிடும். வெவ்வேறு இடத்தில் பிரிந்திருக்கும் காதலன் - காதலியின் உணவை இந்த பாடல் மூலம் தட்டி எழுப்பி, நம்மை உணர வைத்திருப்பர் சுவர்ணலதா. குறிப்பாக 'இன்னிசை மட்டும் இல்லையென்றால் என்றோ... என்றென்றோ... இறந்திருப்பேன்" என்கிற வரிகளை எவ்வளவு கடினமாய் பாடி இவர் கடந்திருப்பார் என்பது அவர் பாடிய இந்த வரிகள் மூலம் நாம் அறிய முடியும்.
தன்னுடைய வாழ்க்கையில் இசைக்காகவே வாழ்ந்து... குடும்பம், குழந்தை, என எதையும் ஏற்படுத்திக் கொள்ளாமல்... இருந்த தேவதையான சுவர்ணலதாவை, ரசிகர்கள் பலரும் இசை பொக்கிஷம் என்றும் ஹம்மிங் குயின் என்றும் வர்ணிப்பது உண்டு.இரண்டு பாடல்களை சினிமாவில் பாடிவிட்டாலே... தலைக்கனத்து இருக்கும் சிலர் மத்தியில், சுவர்ணலதா வித்தியாசமானவர். ரசிகர்கள் மத்தியில் ஒரு வார்த்தை கூட அதிர்ந்து பேசாதவர்.
சுவர்ணலதா 1973 ஆம் ஆண்டு, ஏப்ரல் 29ஆம் தேதி... பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகா, அத்திக்கோடு பகுதியில் உள்ள கீழப்பாரா என்கிற கிராமத்தில் சேருகுட்டி - கல்யாணி ஆகியோருக்கு கடைசி மகளாக பிறந்தவர். இவரின் தந்தை செருக்குட்டு ஒரு பாடகர். ஹார்மோனியம் வாசிப்பதில் கைதேர்ந்தவர். இவரின் தாயாருக்கும், இசையில் ஆர்வம் அதிகம் இருந்ததால், சிறுவயதில் இருந்தே சுவர்ணலதாவுக்கு இசை பழகிப்போன ஒன்றாக இருந்தது. அதேபோல் சிறுவயதில் இருந்தே இசையை நன்கு கற்று வந்தார். தன் தந்தையிடமும், சரோஜா எனும் தன்னுடைய மூத்த சகோதரி இடமும் பாடுவதற்கும்... ஹார்மோனியம் வாசிப்பதற்கும் பயிற்சி பெற்றார் சுவர்ணலதா.
இவரின் திறமையை மேலும் மேம்படுத்த அந்த கிராமத்தில் இருந்து சந்திரவதி எனும் நகருக்கு இவருடைய குடும்பமே இடப்பெயர்ந்தனர். சுவர்ணலதா பாடுவதை கேட்ட அந்த ஊர் மக்கள், இவரை பாராட்டியது மட்டுமின்றி அவரை திரையுலகில் பாட வைக்க முயற்சி செய்யுங்கள்... இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என ஊர் மக்கள் அனைவரும் கூறியதை கேட்டு... சுவர்ணலதாவை பாடகியாக்கும் முயற்சியில் அங்கிருந்து இவருடைய குடும்பமே சென்னைக்கு குடிபெயர்ந்தனர்.
சென்னைக்கு வந்ததும், மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் வீட்டுக்கே சென்று பாடுவதற்கு வாய்ப்பு கேட்டுள்ளார் சுவர்ணலதா. எம்.எஸ்.வோ இவர் சிறிய பெண்ணாக இருப்பதை பார்த்து ஆச்சர்யமடைந்ததோடு மட்டும் இன்றி, ஸ்டுடியோவுக்கு வர சொல்லி அலைக்கழிக்காமல், வீட்டில் வைத்தே ஏதாவது ஒரு பாடலை பாடி காட்ட சொல்லி இருக்கிறார். அதற்கு உயர்ந்த மனிதன் படத்தில் இடம் பெற்ற 'நாளை இந்த வேலை பார்த்து' என்ற எம் எஸ்வியின் பாடலை அழகாக பாடி காட்டிய சுவர்ணலதாவின் குரல் வளம் மிகவும் பிடித்து போனதால், எம்.எஸ்.வி உடனடியாக தனது அடுத்த படத்திலேயே இவருக்கு பாடும் வாய்ப்பை கொடுத்தார்.
கலைஞர் மு கருணாநிதி கதை - வசனம் எழுதி, எம் எஸ் வி இசையில் வெளியான 'நீதிக்கு தண்டனை' என்ற படத்தில் மகாகவி பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' எனும் அற்புதமான பாடலை ஏசுதாசுடன் இணைந்து பாடும் வாய்ப்பை பெற்றார் சுவர்ணலதா. இதுவே இவர் பாடிய முதல் சினிமா பாடலாகவும் அமைந்தது. இந்த பாடலை பாடும் போது, சொர்ணலதாவுக்கு 14 வயது மட்டுமே நிரம்பி இருந்தது. இந்த சின்னஞ்சிறு சிறிய அழகிய குரல் இளையராஜாவுக்கு மிகவும் பிடித்து போனதால், தான் இசையமைத்த 'குரு சிஷ்யன்' திரைப்படத்தில் "உத்தம புத்திரி நானு" என்கிற பாடலை பாட வாய்ப்பளித்தார். அதற்குப் பிறகு அடுத்தடுத்து ஏராளமான பாடல்களை பாடி... புகழின் உச்சிக்கே சென்றார் சுவர்ணலதா.
தமிழ் மொழியை சரியாக உச்சரித்து பாடியதால் இவர் தமிழர் என பலர் நினைத்தனர். அது போலவே தமிழ் மட்டும் இன்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஒரியா, போன்ற மற்ற மொழிகளில் பாடும் போதும் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்... சுவர்ணலதாவை தங்கள் தாய் மொழியை சேர்ந்தவர் என நினைத்தனர். காரணம் அந்த அளவுக்கு உணர்வுபூர்வமாக மொழியின் தன்மை அறிந்தும் அந்த பாடலை பாடக்கூடியவர் சுவர்ணலதா. கீபோர்ட் மற்றும் ஹார்மோனியம் வாசித்துக் கொண்டே பாடும் திறமை பெற்றவர். இதுபோன்ற திறமை ஒரு சில பிரபலங்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் எனலாம். அமைதியான குணம், கூச்ச சுபாவம், தனிமை விரும்பியாகவும், கேமரா முன்பு நடிக்க விரும்பாதவராகவும் இருந்ததால்... பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், மேடை நிகழ்ச்சிகளையும் இவர் தவிர்த்து வந்தார்.
தனக்கு நுரையீரலில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை உணர்ந்த சுவர்ணலதா, வெளிநாடுகளில் இவருக்கு பாட பல வாய்ப்புகள் வந்த போதும் விமானத்தில் சென்றால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் என்பதால், 100-க்கும் மேற்பட்ட வாய்ப்புகளை தவித்தார். 2003 ஆம் ஆண்டு ஏ ஆர் ரகுமான் நடத்திய 'வெளிச்சங்களின் ஒற்றுமை' எனும் நிகழ்ச்சியில் "போறாளே பொண்ணு தாயி" என்கிற பாடலை அழகாக பாடி, புற்றுநோயால் அவதிப்படும் ஏழை எளிய மக்களுக்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், நானும் பங்கு கொள்வதில் பெருமைப்படுகிறேன் என நெகிழ்ச்சியுடன் கூறினார். தனக்கு வாய்ப்பு கொடுத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு நன்றி கூறினார்.
அதே போல் 20 வயது கூட எட்டாத நிலையில், சுவர்ணலதா 'கருத்தம்மா' படத்தில் பாடிய 'போறாளே பொண்ணுதாயி' என்கிற பாடலுக்காக, தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான கலைமாமணி விருதை வென்றார். இதேபோல் 'சின்னதம்பி படத்தின்' போவோமா ஊர்கோலம்.., 'காதலன்' படத்தில் முக்காலா முக்காபுலா.. 'அலைபாயுதே' படத்தின் எவனோ ஒருவன் வாசிக்கிறான்... போன்ற ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடி, ரசிகர்களை மெய்மறக்கச் செய்த இவருக்கு ஒரு தேசிய விருது, 3 தமிழக அரசு விருது, 5 சினிமா எக்ஸ்பிரஸ் விருது, 5 ஃபிலிம் பேர் விருது என ஏராளமான விருதுகள் கிடைத்துள்ளன. புகழ்பெற்ற இந்தி பட இசையமைப்பாளரான நவ்ஷாத் அலியின் பாராட்டை பெற்றதோடு அவரின் மோதிரத்தையும் பரிசாக வென்றார் சுவர்ணலதா. தனது பெற்றோர்களை இழந்து, 37 வயதாகியும் திருமணம் ஆகாமல் நுரையீரல் பிரச்சனையுடன் வாழ்ந்த இவர் ஒரு கட்டத்தில் வாயை திறந்து பேச கூட முடியாத நிலை உருவானது.
சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்ட சுவர்ணலதாவுக்கு வந்துள்ளது என்ன பிரச்சனை? என்று தெரியாமல் பல மருத்துவர்கள் போராடினர். கடைசியாக இடியோபதிக் பல்மணரிஸ் ப்ரோசிஸ் என்றும் அரிதான மற்றும் வினோதமான நோயால் இவர் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது நுரையீரலுக்கு செல்லும் காற்றை தடுத்து, சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும் அரிய வகை நோய் என கூறினர். இந்த நோயை முழுமையாக குணப்படுத்த இதுவரை எந்த மருந்துகளும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. 23 வருட சினிமா வாழ்க்கையில் சுமார் 7,000 மேற்பட்ட, பல மொழி பாடல்களை பாடியுள்ள சுவர்ணலதா...2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் நாள் அந்த காற்றோடு கரைந்து போனார் சுவர்ணலதா.