
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழில் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தில் அவரின் முன்னாள் கணவர் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். 3 படம் ரிலீசுக்கு முன்னரே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அப்படத்திற்காக அனிருத் இசையில் தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் தான்.
ஒரே நாள் இரவில் உலகளவில் ஒய் திஸ் கொலவெறி பாடல் பேமஸ் ஆனதால் 3 படத்தின் மீதான ஹைப்பும் அதிகரித்தது. ஆனால் படத்தின் திரைக்கதை சொதப்பலாக இருந்ததால் படம் ரிலீஸ் ஆகி தோல்வியை தழுவியது. அப்படத்தின் தோல்விக்கு அனிருத்தின் இசையும் ஒரு காரணம் என ஐஸ்வர்யா பேட்டி ஒன்றில் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. அவர் இசை ஏற்படுத்திய ஹைப்பால் தான் 3 படம் தோல்வியடைந்ததாக ஐஸ்வர்யா கூறி இருந்தார்.
3 படத்தின் தோல்விக்கு பின் கெளதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை திரைப்படத்தை இயக்கி இருந்தார் ஐஸ்வர்யா. சூதாட்டத்தை மையமாக வைத்து இப்படத்திற்கு திரைக்கதை அமைத்திருந்தார் ஐஸ்வர்யா, அதுமட்டுமின்றி இதன் கிளைமாக்ஸில் தனுஷை கொக்கி குமாராக கெஸ்ட் ரோலில் வர வைத்து பில்டப் கொடுத்திருந்தார்கள். இருந்தாலும் இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகினார் ஐஸ்வர்யா.
சுமார் 7 ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்த ஐஸ்வர்யா, கடந்த 2022-ம் ஆண்டு தனுஷை விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்த கையோடு, சினிமாவில் லால் சலாம் என்கிற படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளதாகவும் அறிவித்தார். கிரிக்கெட்டை மையமாக வைத்து ஐஸ்வர்யா இயக்கிய அப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பின்னர் ரஜினிகாந்தும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க கமிட்டானார்.
இதையும் படியுங்கள்... மணிமேகலை சொன்ன மாதிரியே நடந்துருச்சே! குக் வித் கோமாளி 5 டைட்டிலை தட்டிச்சென்றது யார் தெரியுமா?
இதனால் லால் சலாம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புடன் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில ரிலீஸ் ஆனது லால் சலாம் திரைப்படம். அப்படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற கேரக்டரில் நடித்திருந்தும் சொதப்பலான திரைக்கதையால் படம் படுதோல்வியை சந்தித்தது. இப்படம் மொத்தமாக ரூ.30 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது.
லால் சலாம் படத்தின் தோல்விக்கு பின் பேட்டியளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அப்படத்தின் சில முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க் தொலைந்துவிட்டதால் தான் படம் சொதப்பிவிட்டதாக கூறி அதிர்ச்சியளித்தார். அவரின் இந்த பேச்சால் லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீசுக்கும் சிக்கல் ஏற்பட்டது. தொலைந்த காட்சிகள் வந்தால் தான் ரிலீஸ் செய்வோம் என ஓடிடி தரப்பு நிபந்தனை விதித்ததால் தான் அப்படம் இதுவரை ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்டை ஐஸ்வர்யா வெளியிட்டுள்ளார். அதன்படி ஓடிடியில் டைரக்டர்ஸ் கட் ஆக லால் சலாம் ரிலீஸ் ஆகும் என்றும் அது தியேட்டரில் பார்த்ததை விட முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும் எனவும் கூறி உள்ளார்.
தொலைந்துபோன காட்சிகள் சிலவற்றை மீட்டு அதை மீண்டும் படத்தில் சேர்த்துள்ளதாகவும், அதற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசை சிலவற்றையும் சேர்த்து வருவதாகவும் இதற்காக அவர் எந்தவித சம்பளமும் வாங்காமல் இந்த வேலையை செய்கிறார் எனவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என அவர் தெரிவித்துள்ளதால், அநேகமாக தீபாவளிக்கு லால் சலாம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ‘கோட்’டுக்கு சோலி முடிஞ்சது! செப்டம்பர் 20ந் தேதி ரிலீஸாகும் அரை டஜன் தமிழ் படங்கள் - அதன் முழு லிஸ்ட் இதோ