திரையுலகம் தன்னை பயன்படுத்திக்கொண்டதாக கூறப்படுவதை ஷகீலா மறுக்கிறார். "நான் செய்த வேலைக்கு எனக்கு நல்ல சம்பளம் கிடைத்தது, அதனால் அவர்கள் என்னை பயன்படுத்தவில்லை" என்று அவர் கூறுகிறார். கேரளாவின் முன்னணி நட்சத்திரங்கள் தனது வளர்ச்சியைத் தடுத்ததாகக் கூறப்படுவதையும் அவர் நம்பவில்லை.
"அவர்களுக்கு முன்னால் நான் ஒரு சிறிய புல்லைப் போன்றவள். அவர்கள் பெரிய மனிதர்கள், பெரிய மனம் கொண்டவர்கள், அப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள்" என்று அவர் குறிப்பிடுகிறார். தனது உச்சக்கட்ட காலம் என்பது ஒரு அலை போன்றது என்றும், அது ஒருநாள் முடிவுக்கு வரும் என்பது தனக்கு முன்பே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மீண்டும் பிறந்தால் ஐபிஎஸ் அதிகாரிதான்
தான் நடித்த படங்களுக்காகத் தான் ஒருபோதும் வருத்தப்படவில்லை என்று கூறும் ஷகீலா, "அதனால்தானே 26 ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்கள் என்னை நேர்காணல் செய்கிறீர்கள்? என்று கேட்கிறார். இருப்பினும், வாழ்க்கையை மீண்டும் வாழ ஒரு வாய்ப்பு கிடைத்தால், இதே தொழிலைத் தேர்ந்தெடுக்க மாட்டேன் என்கிறார்.
மாறாக, சிறுவயதில் இருந்தே நன்றாகப் படித்து ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே தனது விருப்பமாக இருந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். பள்ளிக்காலத்தில் ஆசிரியர்கள் அடித்ததால் படிப்பை வெறுத்ததாகவும், ஆனால் இப்போது தனது நினைவாற்றல் சிறப்பாக இருப்பதால் எதையும் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.