
கருப்பு வெள்ளை காலம் தொடங்கி தற்போது வரை கலர்புல் ஆன கனவுகளோடு, ஊரை, உறவை, நண்பர்களை விட்டு விலகி திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு, கோடம்பாக்கம் நோக்கி படையெடுத்தவர் ஏராளம். சினிமா கம்பெனிகளுக்கு வாய்ப்பு தேடி அலைந்து சாதித்தவர்களைவிட தோல்வியுற்றவர்களே அதிகம். இதில் விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றியடைந்து புகழின் உச்சிக்கு சென்றவர்களும் இருக்கிறார்கள்.
இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரும் தங்களது ரசிகர்களின் ஆதரவோடு தான் வளர்ந்திருக்கிறார்கள். நாளடைவில் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ரசிகர் மன்றங்கள் தான் நடிகர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
புரட்சித் தலைவர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் எம்.ஜி.ஆர், நடிகராக, அரசியல்வாதியாக ஏன் தமிழக முதல்வராக இருந்தார் என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் அவரது ரசிகர்கள் தான்.
இப்படியாக தனது வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய ரசிகர் மன்றத்தை கலைத்த நடிகர்களும் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் நடிகர் அஜித்குமார். ஆரம்ப காலகட்டத்தில் அல்டிமேட் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கட்ட அஜித், அமராவதி என்கிற படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி, ஆசை, காதல் கோட்டை, அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், தீனா, சிட்டிசன், வில்லன், வரலாறு, விஸ்வாசம், துணிவு, விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட 63 படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார்.
கிரீடம், பில்லா என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து மாஸ் நடிகராக உருவெடுத்த அஜித் தனது 40வது பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு ஒரு கடிதத்தை வெளியிட்டார். கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் 29-ந் தேதியன்று வெளியான அந்த கடிதத்தில், நான் என்றுமே என் ரசிகர்களை சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக நான் அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை.
இதையும் படியுங்கள்... Lubber Pandhu Review : சிக்சருக்கு பறந்ததா ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து? விமர்சனம் இதோ
நான் நடிக்கிற படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஆதரவு அளிக்கவும், சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் எனது ரசிகர்களுக்கு உரிமை உண்டு. என் ரசிகர்கள் சமூக நலப் பணிகளை செய்யும்போது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் விரும்புவேன். என்னுடைய 40வது பிறந்தநாளில் எனது கருத்தை என்னுடைய முடிவாக அறிவிக்கிறேன். இன்று முதல் எனது தலைமையின் கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி மன்றத்தை கலைக்கிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இப்படி வளர்ந்து வரும் நடிகர் ஒருவர் தனது ரசிகர் மன்றத்தை கலைப்பது மூலம் அவருக்கு நேரும் இழப்புகளை கருத்தில் கொள்ளாமல், ரசிகர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக அவர் தனது ரசிகர்களுக்கு சொன்னார். அஜித்தின் இந்த துணிச்சலான முடிவை இன்றளவும் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்த பின்பும் கூட இன்று வரை அவரது ரசிகர் பட்டாளம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு தான் செல்கிறது. அவர்களின் படங்களின் முதல்நாள் காட்சியின் போது கிடைக்கும் வரவேற்பே அதற்கு சாட்சி. தனது ரசிகர்களின் பலத்தால் தனது படங்களுக்கு வசூல் வருகிறது என்பதால் அவர்கள் செய்யும் அத்துமீறல்களை நடிகர்கள் கண்டிக்கத் தயங்குவதுண்டு. ஆனால் பலமுறை தன்னுடைய ரசிகர்கள் அத்துமீறிய செயல்கள் ஏதாவது செய்தால் அதனை கண்டித்து அஜித் அறிக்கை வெளியிடுவார். இப்படி ரசிகர்கள் நலனில் அக்கறை காட்டுவதால் தான் நடிகர் அஜித் தன்னுடைய தனி வழியில் சிங்கநடை போட்டு வருகிறார்.
இதையும் படியுங்கள்... Tirupati Laddu: "இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா"! அதுவும் திருப்பதி லட்டுல இப்படியா? இயக்குநர் மோகன்ஜி!