நடிகை நயன்தாரா திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ஜவான் திரைப்படம் தயாராகி வருகிறது. அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் நயன்தாரா. ஜவான் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இதுதவிர தமிழில் இறைவன் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா.
நயன்தாராவின் 75-வது படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்க உள்ளார். இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைக்க உள்ளார். இப்படத்தில் நடிகை நயன்தாரா உடன் நடிகர்கள் ஜெய், சத்யராஜ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங்கை விறுவிறுவென முடித்து இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இப்படம் குறித்த மற்றுமொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இதில் நயன்தாரா உடன் நடிக்க உள்ள ஜெய் மற்றும் சத்யராஜ் ஆகியோர் இதற்கு முன்னர் ராஜா ராணி படத்திலும் இணைந்து பணியாற்றி இருந்தனர். அதோடு அப்படத்தை இயக்கியதும் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ. அப்படம் வேறலெவல் வெற்றியை பெற்றது. அதேபோல் அந்த கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதையும் படியுங்கள்... பிரபல தயாரிப்பாளரின் மகளுடன் காதல்... நடிகர் அசோக் செல்வனுக்கு விரைவில் டும்டும்டும்..?