தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் சங்கீதா என்பவரை கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா ஷாஷா என்கிற மகளும் உள்ளனர். விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை அண்மையில் படித்து முடித்தார்.
இதையடுத்து விஜய் மகன் சினிமாவில் கவனம் செலுத்த உள்ளதாக பரவலாக பேசப்பட்டது. முதலில் அவர் இயக்குனராக ஆசைப்படுவதாகவும், படம் இயக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது. பின்னர் அவரை தன்னைப்போல் மிகப்பெரிய நடிகனாக்க நடிகர் விஜய் ஆசைப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின.
இதற்கெல்லாம் சமீபத்திய நேர்காணலில் முற்றுப்புள்ளி வைத்த விஜய், சஞ்சய் தற்போதைக்கு சினிமா பக்கம் வர வாய்ப்பில்லை என கூறினார். மேலும் சஞ்சய்க்காக பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சூப்பர் கதை ஒன்றை சொன்னதாகவும், ஆனால் சஞ்சய் தற்போது நடிக்க ஆர்வம் இல்லை என்பதால் அதில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் விஜய் அந்த பேட்டியில் கூறி இருந்தார்.