
சினிமாவில் கல்ட் கிளாசிக் என்கிற அங்கீகாரம் ஒரு சில படங்களுக்கு மட்டுமே கிடைக்கும். அப்படி தான் இயக்கிய இரண்டு படங்களுமே கல்ட் கிளாசிக் படங்களாக கொடுத்தவர் தான் பிரேம்குமார். விஜய் சேதுபதி நடித்த 96 படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரேம்குமார், முதல் படத்திலேயே தன்னுடைய முத்திரையை பதித்தார். இதையடுத்து இரண்டாவது படமாக கார்த்தி, அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன் படத்தை இயக்கினார் பிரேம் குமார். அப்படமும் கடந்த ஆண்டு திரையரங்கில் ரிலீஸ் ஆகி ஓரளவு வரவேற்பை பெற்றது. ஆனால் ஓடிடியில் ரிலீஸ் ஆன பின்னர் அப்படத்திற்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்தது. இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் அப்படத்தை பாராட்டினர்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் மெய்யழகன் படம் விமர்சகர்களால் எவ்வளவு பாதிப்பை சந்தித்தது என்பது பற்றி தன்னுடைய மனக் குமுறல்களை கொட்டியுள்ளார் பிரேம்குமார். அவர் கூறியதாவது : “மெய்யழகன் வந்தபோது ஏராளமானோர் என்னிடம் சொன்னார்கள், நீங்க இந்த படத்தை மலையாளத்தில் எடுத்திருக்கலாம். அங்கிருந்து வந்தால் இங்கு இருப்பவர்கள் கொண்டாடி இருப்பார்கள். நீங்க இங்க இந்த படத்தை பண்ணுனது தான் தப்புனு பல பேர் என்னிடம் சொன்னார்கள். அதைக் கேட்கும்போது ரொம்ப வருத்தமாக இருந்தது. என்னடா ஏன் ஊர்ல, என்னோட மொழில ஒரு படத்தை எடுத்தால், இதை நீங்க அங்க எடுத்தா இங்க ஏத்துப்பாங்கனு சொன்னது ரொம்ப கஷ்டமாக இருந்தது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மெய்யழகன் படம் பார்த்து விமர்சகர்கள் சொன்ன கருத்தை நார்மல் ஆடியன்ஸும் நம்ப ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு தரப்பினர் படத்தில் இருந்து ஏன் அந்த காட்சியை தூக்கினீர்கள், அதைதான நாங்கள் ரசித்தோம்னு சொன்னாங்க. ஆனால் விமர்சகர்கள், அதை கதைக்கும் இதுவுக்கும் சம்பந்தமே இல்லை என்று சொன்னார்கள். அவர்களின் நோக்கம் என்னவென்றால் எதாவது சொல்லி படத்தை அடிக்கனும். அவர்களுக்குள் சில உள்நோக்கமும் இருக்கிறது.
என் படத்துக்கான பெயர் எனக்கு கிடைத்துவிட்டது. தியேட்டரில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு படம் போகவில்லை. ஆனால் தப்பித்துவிட்டது. ஓடிடியில் ரிலீஸ் ஆன பின்னர் நல்ல பெயர் கிடைத்தது. படம் உண்மையிலேயே சரியாக இல்லையென்றால், அந்த விமர்சனத்தை நாம் ஏற்றுக்கொள்வோம். ஓடிடியில் இவ்வளவு பாராட்டுக்களை பெற்ற இந்த படம், விமர்சகர்கள் என்று சொல்லிக் கொண்டு சுற்றுபவர்களிடம் இருந்து தப்பிச்சு ஆடியன்ஸுக்கு வரவேண்டிய சூழல் இருக்கிறது. பைரசி எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தது, அதைவிட ஒரு பெரிய அச்சுறுத்தலாக தான் இதைப் பார்க்கிறேன்.
என்னுடைய படம் ரிலீஸ் ஆன போது நல்லா இல்லைனு சொன்ன விமர்சகர்கள், அதன்பின்னர் வந்து, இந்த வருடத்தோட டாப் 10 படங்கள் பட்டியலில் மெய்யழகனை டாப் 3ல் வைத்திருக்கிறார்கள். ரிவ்யூ பண்ணும்போது என்னென்னமோ பேசிட்டு எப்படி டாப் 3ல் வந்துச்சுனு தெரியல. இது ஒரு மன நோய்னு தான் நான் சொல்வேன். இதையெல்லாம் யாரும் பேசமாட்டாங்க. ஏனெனில் நம்முடைய அடுத்த படம் வரும்போது நம்மள போட்டு அடிப்பாங்கனு, எல்லாருக்கும் பயம் இருக்கும். அடிச்சுட்டு போட்டும், அதனால தான் நான் தைரியமா பேசுறேன் என தன் ஆதங்கத்தை கொட்டி உள்ளார் பிரேம் குமார்.