மலேஷியா வாசுதேவன்.. அவர் மகன் மட்டுமில்ல, மகளும் பாடகி தான் தெரியுமா? - பல ஹிட் சாங்ஸ் பாடியிருக்காங்க!
Ansgar R |
Published : Sep 24, 2024, 05:03 PM IST
Prashanthini Vasudevan : இக்கால தலைமுறையினருக்கு பெரிய அளவில் பரிச்சயம் இல்லாத ஒரு பாடகராக இருந்தாலும், தமிழ் சினிமா வரலாற்றில் எந்த காலகட்டத்திலும் மறக்கவே முடியாத ஒரு பாடகர் தான் மலேசியா வாசுதேவன்.
தமிழ் சினிமாவை பொருத்தவரை, எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இணையான புகழோடு வளம் வந்த ஒரு மெகா ஹிட் பாடகர் தான் மலேசியா வாசுதேவன். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவருக்கும் எண்ணற்ற ஹிட் பாடல்களை இவர் பாடியிருக்கிறார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே மலேசியாவில் என்பதால் தான், வாசுதேவன் என்கின்ற தன்னுடைய பெயருக்கு முன்னால் மலேசியாவை இணைத்துக் கொண்டார்.
இளம் வயதிலேயே மேடை பாடகராக அறிமுகமான மலேசியா வாசுதேவன், பாடகராக மட்டுமில்லாமல் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் அசத்தியிருக்கிறார். கிட்டத்தட்ட இந்திய திரை உலகில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 8000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். அதிலும் குறிப்பாக இசை ஞானி இளையராஜாவிற்கு தான் இவர் அதிக அளவிலான பாடல்களை பாடியுள்ளார். கடந்த 2003ம் ஆண்டு இவருக்கு ஏற்பட்ட வலிப்பு நோய் காரணமாக அதன் பிறகு பெரிய அளவில் திரைப்படங்களில் பாடாமல் இருந்து வந்தார். இந்த சூழலில் தான் கடந்த 2011ம் ஆண்டு சென்னையில் தனது 66வது வயதில் அவர் காலமானார்.
மறைந்த லெஜெண்டரி பாடகர் மலேசியா வாசுதேவனுக்கு யுகேந்திரன், பிரசாந்தினி மற்றும் பவித்ரா என்று மூன்று குழந்தைகள் உண்டு. இதில் மூத்தவர் யுகேந்திரன் பற்றி நாம் அனைவரும் பெரிய அளவில் கேள்விப்பட்டிருப்போம். காரணம் தந்தையை போல தமிழ் சினிமாவில் நல்ல பல பாடல்களை பாடியது மட்டும்மல்லாமல், நடிகராகவும் பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து அசத்தி வருகிறார். கடந்த 2001ம் ஆண்டு பிரபல நடிகர் அஜித் நடிப்பில் வெளியான "பூவெல்லாம் உன் வாசம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் நடிகராக தமிழ் திரைப்படத்தில் களமிறங்கினார்.
அண்மையில் வெளியாகி இப்போது வரை மெகா ஹிட் ஆக ஓடிவரும் தளபதி விஜயின் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்திலும் அப்துல் என்ற கதாபாத்திரத்தில் அவர் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவரும் இப்பொது மலேசியாவில் செட்டில் ஆகிவிட்ட நிலையில், திரைப்பட பணிகளுக்காக மட்டுமே இவர் இந்தியா வந்து செல்கிறார். பாண்டவர் பூமி திரைப்படத்தில் ஒழித்த "தோழா தோழா", கோவா திரைப்படத்தில் வந்த "அடிடா நையாண்டிய" என்ற பாடல், சாமி திரைப்படத்தில் வந்த "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா" என்கின்ற பாடல், ஆட்டோகிராப் படத்தில் ஒலித்த "கிழக்கே பார்த்தேன் விடியலாய் வந்தாய் அன்பு தோழி" உள்ளிட்ட பல மெகா ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
34
Singer Prashanthini
இப்படி மலேசியா வாசுதேவனின் மகன் மகேந்திரன் பற்றி நமக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருந்தாலும், அவருடைய தங்கையும் மலேசியா வாசுதேவனின் மகளுமான பிரசாந்த்னி குறித்து நம்மில் பலருக்கு பெரிய அளவில் தெரியாது. உண்மையில் அவரும் ஒரு மிகச்சிறந்த பாடகி தான். தமிழ் திரை உலகில் பல சூப்பர் ஹிட் பாடல்களை அவர் பாடியிருக்கிறார்.
பாடகி பிரசாந்தினியும் தனது அண்ணனை போல திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். கடந்த 1983ம் ஆண்டு பிறந்த அவர், கடந்த 2008ம் ஆண்டு பிரேம்நாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்போது அவருக்கு ஒரு மகன் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2001ம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான, நடிகர் ஷாமின் 12B திரைப்படத்தின் மூலம் தான் இவர் பாடகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற "லவ் பண்ணு" என்கின்ற பாடலை, பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்துடன் இணைந்து பாடியது பிரசாந்தினி தான். இந்த பாடல் மட்டுமல்ல பிரசாந்தின் "வின்னர்" திரைப்படத்தில் ஒலித்த "கோழி கொக்கர கோழி", "வாரணம் ஆயிரம்" படத்தில் வந்த "முன்தினம் பார்த்தேனே", "அயன்" திரைப்படத்தில் வந்த "விழி மூடி யோசித்தால்", "ஆடுகளம்" படத்தில் வரும் "அய்யயோ நெஞ்சு" போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியது பிரசாந்தினி தான். இறுதியாக தமிழில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான "மகா மகா" என்கின்ற திரைப்படத்தில் தான் இவர் இறுதியாக பாடல்களை பாடி இருந்தார்.
44
Prashanthini
கடந்த 9 ஆண்டுகளாக இவர் பெரிய அளவில் திரைத்துறையில் பயணிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது சில மேடை கச்சேரிகளில் இவர் தொடர்ச்சியாக பாடி வருவது குறிப்பிடத்தக்கது. யுகேந்திரன் மற்றும் பிரசாந்தினி ஆகிய இருவரும் தங்களுடைய தந்தை மலேசியா வாசுதேவனிடம் தான் இசை கற்றுக் கொண்டார்கள். அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் "வேட்டையன்" படத்திலிருந்து வெளியான "மனசிலாயோ" என்கின்ற பாடலில், மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை இசையமைப்பாளர் அனிருத் மிக நேர்த்தியாக AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி அந்த பாடலை மெகா ஹிட் பாடலாக மாற்றி இருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.