நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் படத்தயாரிப்புக்காக, மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. இதையொட்டி விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும், லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இன்னும் விஷால் தரப்பு தாக்கல் செய்யவில்லை என லைகா சார்பில் புகார் கூறப்பட்டது.
இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், அந்த வழக்கு அடுத்த மாதம் தான் விசாரணைக்கு வரவுள்ளதால், இந்த மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென கோரினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லைகா தரப்பு, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்காததால், பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்குப் பின்னர் விசாரிப்பதாக கூறி, மனு மீதான விசாரணையை அக்டோபர் 14ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள்... அட ஹனுமான் படத்தில் வருவது திருச்சிற்றம்பலம் நாயகி நித்யாமேனனா? சிறு வயதில் எவ்ளோ க்யூட்டாக இருக்காங்க..