தமிழ் சினிமாவில் 4 படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும், அந்த நான்குமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் கோலிவுட்டின் டாப் இயக்குனராக உயர்ந்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்க தயாராகி வருகிறார். இதனிடையே சமீபத்தில் தனியார் ஊடகம் நடத்திய பிரஸ் மீட் ஒன்றில் கலந்துகொண்டு கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய லோகேஷ் கனகராஜ், பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
அப்போது அவர் இயக்கிய முதல் படமான மாநகரத்தில், நாயகன் ஸ்ரீயை சென்னை மீதான வெறுப்பு கொண்ட இளைஞனாக காட்டியது ஏன் என்றும், நிஜத்தில் உங்களுக்கு சென்னை பிடிக்குமா? பிடிக்காதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த லோகேஷ், நான் கோவை அருகே கிணத்துக்கடவு என்கிற சின்ன ஊரை சேர்ந்தவன். அப்போது அங்கிருந்து கல்லூரியில் படிக்க சென்றபோது கோயம்புத்தூரே எனக்கு புதுசா இருந்தது. அந்த நகர சூழலுக்கு என்னால் என்னை மாற்றிக் கொள்ளவே வெகு நாட்கள் ஆனது.
மாநகரத்தில் ஸ்ரீயோட கேரக்டர், சென்னை மீதான வெறுப்பு கொண்ட இளைஞனாக காட்டியிருந்தாலும், இறுதியில் அவன் இந்த ஊரை பற்றி புரிந்துகொள்ளும் காட்சியும் இருக்கும். மனுஷன் பண்ற தப்புக்கு ஊரை குறைசொல்லி எந்த பிரயோஜனமும் இல்ல. ஊர் என்பது பல மக்கள் வந்து போற இடம், பெயர் தெரியாத ஒருவனுக்கு கூட முதலில் உதவி செய்வது சென்னை மாதிரி ஊர்ல தான் நடக்கும்னு சொல்லிருந்தேன்.