பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவர் நடித்த லால் சிங் சத்தா திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் அவருடன் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஹாலிவுட்டில் ஹிட்டான பாரஸ்ட் கோம்ப் என்கிற படத்தை தழுவி தான் இப்படத்தையும் இயக்கி இருந்தார் அத்வைத் சந்தன்.
இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. குறிப்பாக தமிழ்நாட்டில் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. அதுமட்டுமின்றி இப்படம் ரிலீசுக்கு முன்பே இப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என பாலிவுட்டில் பாய்காட் டிரெண்ட் வைரலாகியது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், தங்கல் படத்துக்கு பின் அமீர்கான் நடித்த தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் மற்றும் லால் சிங் சத்தா ஆகிய படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால், அவர் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளாரா. அதன்படி அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு எந்த படங்களிலும் நடிக்காமல் ஒரு பிரேக் எடுக்க உள்ளாராம். அந்த காலகட்டத்தில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கவும், படத்தயாரிப்பில் கவனம் செலுத்தவும் அமீர்கான் முடிவு செய்துள்ளாராம்.