சரவணன், ஒரு சாதாரண கார் மெக்கானிக்காக தனது மகளுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார். மனைவி இல்லாத குறையை உணர்த்தாமல், மகளை உயிராகக் காத்து வளர்க்கும் அப்பாவின் பாசம் படத்தின் ஆரம்பத்திலேயே நன்றாக பதிகிறது. இதே நேரத்தில், தூத்துக்குடி துறைமுகத்தில் சட்டவிரோதமாக வரும் ஒரு மர்ம கண்டெய்னரைச் சுற்றி சம்பவங்கள் சுழல தொடங்குகின்றன. அதைத் துரத்திச் செல்லும் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா, உண்மையை கண்டுபிடிக்க பல சவால்களை எதிர்கொள்கிறார்.
ஒரு கட்டத்தில், துறைமுகத்துடன் தொடர்புடைய ஒரு ரவுடியின் கார் சரவணனிடம் வேலைக்கு வருகிறது. அதன்பிறகு அந்த ரவுடி சரவணனின் வாழ்க்கையில் அடிக்கடி நுழையத் தொடங்குகிறார். இதை பயன்படுத்திக் கொள்ளும் ஆண்ட்ரியா, சரவணனின் மகளை மறைத்து வைத்து, அந்த ரவுடி தான் கடத்தியதாக நம்ப வைக்கிறார். மகளை மீட்கும் அவசரத்தில், சரவணன் போலீஸ் கூறும் வழியில் நடக்கத் தொடங்குகிறார். ஆனால் கதை முன்னேறும்போது, இந்த முழு விளையாட்டையும் வடிவமைத்தது ஆண்ட்ரியா அல்ல, சரவணனே என்பதும் தெரிய வருகிறது. ஏன் அவர் இப்படிச் செய்தார்? அந்த ரவுடியுடன் அவருக்கு என்ன பகை? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.