அந்தத் துயரமான ஞாயிற்றுக்கிழமை காலை, வழக்கம்போல வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கார் ஓட்டுநருடன் கே. ராஜன் கிளம்பியுள்ளார். அப்போது அவர் வழக்கத்திற்கு மாறாக மிகவும் அமைதியாகவும், ஏதோ ஒரு ஆழ்ந்த சிந்தனையிலும் இருந்ததாக ஓட்டுநர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
கார் சென்னை அடையாறு ஆற்றங்கரைப் பாலத்தின் அருகே வந்தபோது, திடீரென ஓட்டுநரிடம், “காரை ஓரமா நிறுத்துப்பா... எனக்கு மனசு ஒரு மாதிரியா இருக்கு. கொஞ்ச நேரம் காலாற நடந்துட்டு (நடைபயிற்சி) வரேன்...” என்று கூறியுள்ளார். இதுதான் கே. ராஜன் தனது கார் ஓட்டுநரிடம் பேசிய கடைசி வார்த்தைகள்!
ஓட்டுநரும் காலையில் லேசான நடைபயிற்சி மேற்கொள்ளத்தான் செல்கிறார் என்று நினைத்து காரை நிறுத்தியுள்ளார். ஆனால், காரை விட்டு இறங்கி பாலத்தின் மீது விறுவிறுவென நடந்த கே. ராஜன், யாரும் எதிர்பாராத விதமாக அடுத்த சில நொடிகளில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ளார். ஓட்டுநர் பதறிப்போய் அலறுவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.
மீட்கப்பட்ட சடலம்: அதிர்ச்சியில் போலீசார் பொதுமக்கள் மற்றும் ஓட்டுநரின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அடையாறு மற்றும் சைதாப்பேட்டை தீயணைப்புத் துறையினர் ஆற்றில் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு கே. ராஜனின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. அவர் ஏதேனும் கடிதம் (Suicide Note) எழுதி வைத்துள்ளாரா அல்லது யாருக்கேனும் போன் செய்து பேசினாரா என்ற கோணத்தில் அடையாறு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஓயாத போராளியின் சோக முடிவு
1983-ல் 'பிரம்மச்சாரிகள்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி, 'நம்ம ஊரு மாரியம்மா' போன்ற படங்களை இயக்கி, விநியோகஸ்தர் சங்கத் தலைவராகவும் சாதித்த ஒரு சினிமா போராளியின் இந்த முடிவு தமிழ் திரையுலகை உறைந்து போகச் செய்துள்ளது. எத்தனையோ தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்திற்காக மேடைகளில் சண்டை போட்ட கே. ராஜன், தனது இறுதி நாட்களின் தனிமையை வெல்ல முடியாமல் போனதுதான் தமிழ் சினிமாவின் ஆகப்பெரும் சோகம்!