நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்தநாள்..!! அதிகம் பார்த்திடாத அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ..!!

First Published Oct 1, 2021, 2:09 PM IST

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் (Sivaji Ganesan) 93 வது பிறந்த நாளை உலகத் தமிழர்கள் அனைவரும் நினைவு கூர்ந்து வருகின்றனர். இவருக்கு அடையாற்றில் கட்டப்பட்டுள்ள, மணிமண்டபத்தில் இன்று காலை முதலே, பிரபலங்கள், அரசியல்வாதிகள் அவரது ஆளுயர சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தி வருகிறார்கள். இவரது அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

1952 ஆம் ஆண்டு 'பராசக்தி' படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கியவர் நடிகர் திலகம், சிவாஜி கணேசன். இந்த படத்தில் இவர் பல காட்சிகளில் உபயோகித்த வார்த்தை சக்ஸஸ் தான். அன்று தொடங்கிய அவரது சக்ஸஸ் பயணம், திரையுலகில் கடைசி வரை சக்ஸஸ் மன்னனாகவே பார்க்கப்பட்டார்.

1928 ஆம் ஆண்டு, அக்டோபர் 1 ஆம் தேதி, சின்னையா மண்ராயர் – ராஜாமணி தம்பதிக்கு நான்காவது மகனாக பிறந்த கணேசன், ஆரம்பத்தில் ஒரு நாடக நடிகராக மேடையேறியவர். தொடர்ந்து பேசும் வசனம், தெளிவான உச்சரிப்பு இவரை பலகட்ட போராட்டத்திற்கு பின் நடிகராக மாற்றியது.

சிவாஜி தான் ஏற்று நடித்த 'சத்திரபதி சிவாஜி' கதாபாத்திரத்தின் மூலமாக மிகவும் பிரபலம் அடைந்த காரணத்தால், சிவாஜி கணேசன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். பின்னாளில் அதுவே அவரது பெயராகவும், நீக்க முடியாத அடையாளமாகவும் மாறியது.

சிவாஜி கணேசனின் நடிப்பு, மற்ற நடிகர்களை விட மிகவும் வித்தியாசமானது. சிலர் அவர்களது பாவனைகளால் நடிப்பர், சிலர் உடல் மொழியால் நடிப்பர், ஆனால் சிவாஜி கணேசன் நடிக்கும் போது அவரது கண்கள், புருவம், நெற்றி, மூக்கு, உதடு, கன்னங்கள் என அனைத்தும் நடிக்கும். எனவே இதனை அப்போதைய ஒளிப்பதிவாளர்கள் போகஸ் செய்து எடுத்ததும் உண்டு.

சிவாஜி கணேசனின் மற்றொரு தனி சிறப்பு என்னவென்றால், அவருடைய படத்தில் எவ்வளவு திறமையாக நடிகர் நடிகைகள் தங்களது நடிப்பை வெளிப்படுத்தினாலும், அதனை அசால்ட் செய்து ரசிகர்களை கண் இமைக்கும் நேரத்தில், தன்னுடைய வசீகர நடிப்பால் கட்டி போட்டு விடுவார். படம்  முடிந்து வெளியே வரும்போது, இவரது நடிப்பு தான் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும்.

குறிப்பாக, நடிப்பை தத்ரூபமாக வெளிப்படுத்த பல நாட்கள் பட்டினி கிடந்தும், தூங்காமலும் கூட நடித்துள்ளார். அந்த அளவுக்கு நடிப்பின் மீது இவருக்கு ஈடுபாடு. இன்று தங்களது உடலை வருத்தி நடிக்கும் கமல், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் முன்னோடி. எனவே தான் இவரது நடிப்பு இன்று வரை அனைவர் மனதிலும் நிலைத்து நிற்கிறது.

இன்று வரை நமக்கு கடவுள் பரமசிவம், ராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன் என நாம் பார்க்காதவர்களின் முகங்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று கூறினால் அது மிகையாகாது.

இப்படி பட்ட, மாபெரும் சிறப்புக்குரிய நடிகரின் பிறந்த நாள், கடந்த 2018 ஆம் ஆண்டு அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது மட்டும் இன்றி, நடிகர் திலகத்திற்கு சென்னையில் மணி மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. இன்றைய தினம் பல பிரபலங்கள், அரசியல் வாதிகள், ரசிகர்கள், சிவாஜி குடும்பத்தினர் என ஒன்று திரண்டு இவரது பிறந்தநாளை சிறப்பித்து வருகிறார்கள்.

click me!