பிரபல நடிகருக்கு படப்பிடிப்பில் திடீர் மாரடைப்பு..!! உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

First Published Oct 1, 2021, 11:36 AM IST

பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், ரத்த அழுத்தம் காரணமாகவே படப்பிடிப்பில் மயங்கி விழுந்ததாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லத்திகா என்ற படம் மூலமாக 2011ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். சொந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமானதால் பவர் ஸ்டாரை கலாய்க்காதவர்களே கிடையாது. ஆனாலும் அந்த கலாய்களை எல்லாம் பிளஸ்சாக மாற்றிய பவர் ஸ்டார், தற்போது தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக உயர்ந்துள்ளார்.

நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படம் பவர் ஸ்டாருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்து. அதன் பின்னர் கோலி சோடா, மெர்லின், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, என்ன தவம் செய்தாயோ, ஓடு ராஜா ஓடு, காட்டுப் புறா ஆகிய படங்களில் நடித்தார்.

கடைசியாக கொரோனாவிற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான 'கேப்மாரி' திரைப்படத்தில் பவர் பாண்டி துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றார்.

தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள இவர், பிக்பாஸ் வனிதா விஜயகுமாருக்கு ஜோடியாக, 'பிக்கப் டிராப்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீர் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக, படப்பிடிப்பிலேயே மயங்கி விழுந்தார் என்கிற தகவல் வெளியானது. இதை தொடர்ந்து படக்குழுவினர் அவரை சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுக்கு ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் வரவில்லை என்றும், மாரடைப்பு ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தற்போது படப்பிடிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பவர் ஸ்டார் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

click me!