
தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகைகள், வரலாற்றில் இடம் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் உருவாவது வழக்கம். அந்த வகையில் சினிமாவிலிருந்து அரசியல் ஆளுமை பெற்று தமிழகத்தை ஆட்சி புரிந்த மறைந்த தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் வெளியானது.
இதே போன்று மறைந்த பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படம் உருவானது. மகாநடி என்று தமிழில் வெளியான இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக வாழ்ந்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார். இதே போன்று தான் இவர்களது வரிசையில் அடுத்து இருப்பவர் மனோரமா. ஆச்சியாக வாழ்ந்து மறைந்த நடிகை மனோரமாவின் வாழ்க்கை வரலாறு படங்கள் குறித்து இதுவரையில் எந்த இயக்குநரும் பேச ஆரம்பிக்கவில்லை.
சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஆர் முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், சோ, நாகேஷ், ஜெமினி கணேசன், சிவக்குமார், மேஜர் சுந்தராஜன், ரஜினிகாந்த், விஜயகாந்த், அஜித், பிரபு, கார்த்திக் என்று ஏராளமான நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மனோரமா 5000க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அதோடு கின்னஸ் உலக சாதனை புத்தக்கத்திலும் இடம் பிடித்திருக்கிறார்.
என்னதான் வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னதாக வறுமையில் வாடிவந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ராஜமன்னார்குடியில் 1937 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி பிறந்தவர் கோபிசந்தாவான ஆச்சி மனோரமா. ஒவ்வொருவரது மனதிலும் ஆச்சியாகவே வாழ்ந்தவர் மனோரமா. வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனது அம்மாவின் தங்கையை தந்தை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து அம்மாவை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
வறுமையால் வாடிய இருவரும் காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூர் என்ற கிராமத்திற்கு வந்தனர். 12 வயது முதலே நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் வைரம் நாடக சபாவில் சேர்ந்தார். அப்போது பள்ளத்தூர் பாப்பா என்று அழைக்கப்பட்டார்.
திறமையான நடிப்பின் மூலமாக நாடக இயக்குநரால் மனோரமா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு எஸ் எஸ் ஆர் நாடக மன்றத்தில் சேர்ந்தார். அந்த நாடக மன்றத்தைச் சேர்ந்த எஸ் எஸ் இராமநாதன் என்பவரை காதலித்து 1964 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூபதி என்ற மகன் பிறந்த நிலையில் 1966ஆம் ஆண்டு கணவரை பிரிந்து சென்னைக்கு வந்துள்ளார்.
அண்ணாதுரை மற்றும் கருணாநிதி ஆகியோர் மேடை நாடகங்களில் நடித்திருந்த நிலையில் அவர்களுடன் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் என் டி ராமராவ் என்று 5 முதல்வர்களுடன் நடித்த பெருமையை கொண்டவர். நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கு ஆண்களை மிஞ்சியது எவரும் இல்லை பேசப்பட்ட காலகட்டத்தில் நாகேஷ், சோவிற்கு அடுத்தபடியாக தனது நடிப்புத் திறமையின் மூலமாக காமெடி கதாபாத்திரத்தில் தனி முத்திரை பதித்தவர் ஆச்சி மனோரமா.
இதுவரையில் இவரது வாழ்க்கை வரலாறு படம் உருவாகவில்லை. தற்போது உள்ள இயக்குநர்களில் எவரேனும் ஆச்சி மனோரமாவின் வாழ்க்கை கதையை மையப்படுத்தி படம் எடுப்பார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். ஆச்சி மனோரமாவின் கதாபாத்திற்கு காமெடி நடிகையான கோவை சரளா சரியான தேர்வாக இருப்பார் என்பது எங்களது கருத்து…