கோலிவுட்டில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்து வருவது லைகா. விஜய் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த லைகா நிறுவனம், கோலமாவு கோகிலா, வடசென்னை, ரஜினியின் 2.0, சிவகார்த்திகேயன் நடித்த டான், மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தயாரித்து உள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள லைகா நிறுவனத்துக்கு சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் உள்ள தியாகராய நகர், காரப்பாக்கம், அடையாறு உள்பட 8 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் பேரின் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.