லைகா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு - பின்னணி என்ன?

First Published May 16, 2023, 9:19 AM IST

தமிழ் திரையுலகில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தயாரித்துள்ள லைகா நிறுவனத்திற்கு சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோலிவுட்டில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்து வருவது லைகா. விஜய் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த லைகா நிறுவனம், கோலமாவு கோகிலா, வடசென்னை, ரஜினியின் 2.0, சிவகார்த்திகேயன் நடித்த டான், மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தயாரித்து உள்ளது.

குறிப்பாக கடைசியாக லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது. இதுதவிர அஜித்தின் 62-வது படமான விடாமுயற்சியையும் லைகா நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. தடம், தடையற தாக்க போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி தான் இப்படத்தையும் இயக்க உள்ளார்.

இதையும் படியுங்கள்... சிஎஸ்கே-வை வீழ்த்திய கையோடு சூப்பர்ஸ்டார் வீட்டுக்கு விசிட் அடித்த கொல்கத்தா வீரர்கள் - வைரலாகும் போட்டோஸ்

இந்நிலையில், சென்னையில் உள்ள லைகா நிறுவனத்துக்கு சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் உள்ள தியாகராய நகர், காரப்பாக்கம், அடையாறு உள்பட 8 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் பேரின் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லைகா நிறுவனம் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 171 படம் மற்றும் அவர் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் போன்ற படங்களையும் தயாரித்து வருகிறது. இன்று காலை முதல் லைகா நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  திருமணமாகி 10 வருடங்களுக்கு பின் கர்ப்பமானதன் சீக்ரெட்.?கரு முட்டையை பாதுகாத்தோம் ராம் சரண் மனைவி ஓபன் டாக்!

click me!