லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லியோ.’ இந்த திரைப்படத்தில் பாடல் ஒன்றில் ஆயிரம் பேரை ஆட வைப்பதாக கூறி ரூ.35 லட்சத்தை வாங்கி அதை முறையீடு செய்ததாக நடன இயக்குனர் சங்கத்தின் தலைவராக இருக்கும் தினேஷ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர் நடன இயக்குனர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என நடன இயக்குனர்கள் சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.
25
தேசிய விருது பெற்ற நடன இயக்குனர் தினேஷ்
2001-ம் ஆண்டு வெளியான ‘மனதை திருடி விட்டாய்’ படத்தில் நடன இயக்குனராக அறிமுகமானவர் தினேஷ். கடந்த 25 ஆண்டுகளில் 100 படங்களுக்கும் மேல் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். பிரபுதேவாவின் தந்தை நடன இயக்குனர் ராஜு சுந்தரமின் நடனக் குழுவில் பணியாற்றிய இவர், பிரபு தேவாவின் அண்ணன் நாகேந்திர பிரசாத்தால் அறிமுகப்படுத்தப்பட்டார். பிரபுதேவாவின் நடனக் குழுவிலும் மிகச்சிறந்த நடனக் கலைஞராக இருந்தார். 2011-ல் வெளியான ‘ஆடுகளம்’ படத்தில் சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதையும் பெற்றார்.
35
ரூ.35 லட்சத்தை ஏமாற்றியதாக தினூஷ் மீது குற்றச்சாட்டு
‘அயன்’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கான சிறந்த நடன இயக்குனருக்கான ஃபிலிம்பேர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. நடனம் மட்டுமல்லாமல் நடிப்பிலும் ஆர்வம் காட்டும் வரும் இவர், ‘லோக்கல் சரக்கு’, ‘நின்னு விளையாடு’, ‘ஒரு குப்பை கதை’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். நடன இயக்குனர் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகிக்கும் இவர் மீது தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ‘லியோ’ படத்தில் வரும் “நான் ரெடி தான் வரவா…” பாடலுக்கு ஆயிரம் பேரை நடனம் ஆட வைப்பதாக கூறி ரூ.35 லட்சம் தினேஷ் பெற்றுள்ளார்.
ஆனால் அந்தப் பாடலில் நடனம் ஆடியவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் தினேஷ் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. மேலும் நடன இயக்குனராக இருக்கும் மாரி மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ள நிலையில், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தினேஷ் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் பதவி விலக வேண்டும் என கூறிய நடன இயக்குனர் கௌரிசங்கர் மீது தினேஷ் மற்றும் ஆதரவாளர்கள் தாக்குதலும் நடத்தி உள்ளனர். இந்த நிலையில் நடன இயக்குனர் சங்கத்தின் துணைத் தலைவரான கல்யாண் மாஸ்டர் தலைமையில் பொதுக்குழு கூடியுள்ளது.
55
தினேஷ் பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம்
இப்போது அங்கு வந்த தினேஷ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கல்யாண் மாஸ்டர் ஆதரவாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கல்யாண் மாஸ்டர் தரப்பினர் நடன இயக்குனர் சங்கத்தின் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தியாகராய நகர் போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் தினேஷ் மாஸ்டர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என கல்யாண் மாஸ்டர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.