
அல்லு அர்ஜூன் நடிப்பில் வந்த புஷ்பா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து புஷ்பா படத்தின் 2ஆம் பாகம் உருவானது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படம் கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்திற்கு சிறப்பு காட்சிக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் ஹைதரபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்காக நள்ளிரவு முதல் நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் தியேட்டர் முன்பு திரண்டனர். அதோடு, புஷ்பா 2 படத்தை தனது குடும்பத்தோடு பார்க்க அல்லு அர்ஜூனும் சந்தியா திரையரங்கிற்கு வருகை தந்திருந்தார். இதனால், திரையரங்கு முன்பு அதிக ரசிகர்கள் கூடினர்.
இதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய ஊழியர்கள், போலீசாரை வரவழைத்தனர். போலிசாரும் கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். இச்சம்பவத்தில் ரேவதி என்ற பெண்ணும், அவரது மகனும் மயக்கமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். அதில், ரேவதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் திரையரங்கு உரிமையாளர், பாதுகாவலர்கள் மற்றும் அல்லு அர்ஜூன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் தேதி அல்லு அர்ஜூனை போலீசார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரை கைது செய்வதாக அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் நம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இதற்கிடையில் அல்லு அர்ஜூன் தரப்பில் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
எனினும், ஜாமீன் ஆவணங்கள் கிடைக்க காலதாமதம் ஆன நிலையில் அல்லு அர்ஜூன் ஒரு நாள் இரவு முழுவதும் சிறையில் கழிக்க நேரிட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த நாள் காலையில் ஜாமீனுக்கான ஆவணங்கள் கிடைக்கப் பெற்ற நிலையில் அல்லு அர்ஜூன் சிறையிலிருந்து வெளியில் வந்தார். அவருக்கு பிரபலங்கள் பலரும் நேரில் சென்று ஆறுதல் கூறினர். இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அல்லு அர்ஜூன் இது முழுக்க முழுக்க எதிர்பாராமல் நடைபெற்ற விபத்து. இதில் தனிமனிதனை குற்றம் சாட்டுவது நியாயமன்றது என்று கூறியிருந்தார்.
அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்குவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜூனுக்கு எதிராக இன்று குரல் கொடுத்திருந்தார். சிறையிலிருந்து வெளியில் வந்த அவரை ஒட்டு மொத்த சினிமா துறையும் நேரில் சென்று சந்திக்கிறது. இறந்து போன பெண் குறித்து யாரேனும் கவலைப்பட்டீர்களா? அல்லது அவரது மகன் குறித்தாவது கவலைப்பட்டீர்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அல்லு அர்ஜூன், நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. அரசியல் தலைவர்கள் பற்றியும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. என்னுடைய பெயருக்கு கலங்கும் ஏற்படுத்தும் வகையில் இச்சம்பவம் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் தான் அல்லு அர்ஜூன் வீட்டின் முன்பு திரண்ட ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் திடீரென்று தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். கல் வீசியும், அங்கிருந்த பூந்தொட்டிகளையும் தூக்கி எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், ரேவதி குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் மாணவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.