தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பிரம்மாண்ட படங்களை இயக்கியதன் மூலம் இந்திய அளவில் பாப்புலர் ஆனவர் இயக்குனர் ஷங்கர், இவர் இயக்கத்தில் கடைசியாக எந்திரன் 2.0 திரைப்படம் வெளியானது. ரஜினி நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
இதையடுத்து கமலின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார் ஷங்கர். இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து நிறுத்தப்பட்ட ஷூட்டிங் இன்று வரை தொடங்கப்படவில்லை. இடையே ஷங்கருக்கும், லைகா நிறுவனத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் இப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டார் ஷங்கர்.
இதையடுத்து ராம்சரணுடன் கூட்டணி சேர்ந்த ஷங்கர், அவர் நடிப்பில் உருவாகும் ஆர்.சி 15 படத்தை இயக்கி வருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். திரு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.