யாஷிகா ஆனந்திற்கு அறுவை சிகிச்சை... அக்காவின் உடல் நிலை பற்றி தங்கை பகிர்ந்த உருக்கமான பதிவு...!

First Published Jul 26, 2021, 8:29 PM IST

இடுப்பு, முதுகு, கை, கால் என பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகையான யாஷிகா ஆனந்த் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு பார்ட்டில் ஒன்றில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த் டாடா ஹேரியர் காரை படுவேகமாக ஓட்டியுள்ளார்.  அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற பகுதி  அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. 

Yashika anand

அங்கிருந்து தூக்கி வீசப்பட்ட கார் பள்ளத்தில் விழுந்துள்ளது. காருக்குள் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் நெருங்கிய தோழியான பெண் இன்ஜினியர் வள்ளிசெட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

Yashika anand

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பள்ளத்தில் சிக்கிய காரையும், படுகாயம் அடைந்தவர்களையும் மீட்டனர். முதற்கட்டமாக பூஞ்சேரியில் உள்ள முதலுதவி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட யாஷிகா மற்றும் அவருடைய ஆண் நண்பர்களான சையது, ஆமீர் ஆகிய மூவரும், படுகாயங்கள் அதிகம் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இடுப்பு, முதுகு, கை, கால் என பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் யாஷிகா ஆனந்தின் தங்கையான ஓஷின் ஆனந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. 

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரசிகர்கள் அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றி.. யாஷிகா ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கண் விழித்துவிட்டார். அவருக்கு பல்வேறு இடங்களில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளதால், இன்னும் வரும் நாட்களில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட உள்ளன என பதிவிட்டுள்ளார். 

click me!