
நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் 3-வது மகள் தான் கீர்த்தி பாண்டியன். இவர் பிப்ரவரி 18, 1992 அன்று சென்னையில் பிறந்தார். கவிதா பாண்டியன் மற்றும் கிரணா பாண்டியன் என்ற 2 சகோதரிகள் உள்ளனர். சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரமத்தில் பள்ளி படிப்பை முடித்த அவர், அங்கேயே பட்டப்படிப்பையும் முடித்தார்.
பட்டம் பெற்ற பிறகு, கீர்த்தி பாண்டியன் பாலே மற்றும் சால்சா நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் 2015 அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்துள்ளது. தனது தந்தைக்கு சொந்தமான திரைப்பட விநியோக நிறுவனமான A&P குரூப்ஸின் தலைமை இயக்குனராக கீர்த்தி பாண்டியன் இருந்தார். எனினும் தனது நிறம் மற்றும் எடை குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் திரைத்துறையில் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால் அதே நேரம் தனக்கு முக்கியத்துவம் இல்லாத சிறிய கதாப்பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதும் கீர்த்தி அதை நிராகரித்தார். ஆடிஷன் நடக்கும் போது பிரபல நடிகரின் மகள் என்பதால், வாரிசு நடிகை என்ற விமர்சனம் எழக்கூடாது என்பதற்காக தனது கீர்த்தி என்ற பெயரை சொல்லியே தன்னை அறிமுகம் செய்து கொள்வார். ஒருமுறை கீர்த்தி பாண்டியன் அளித்த பேட்டியில் தனது கலர், தோற்றம் காரணமாக பல இயக்குனர்கள் தன்னை நிராகரித்ததாகவும், ஒருக்கட்டத்தில் தனது நம்பிக்கையே உடைந்துவிட்டதாகவும் வேதனையும் தெரிவித்திருந்தார்.
2019 ஆம் ஆண்டு தும்பா என்ற படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். ஹரிஷ் ராம் இயக்கிய இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்தார். எனினும் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
பின்னர் ஹெலன் என்ற மலையாள படத்தின் ரீமேக்காக உருவான அன்பிர்கிணியாள் படத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கீர்த்தி பாண்டியனின் நடிப்பு பலதரப்பினரால் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான சைமா விருதை கீர்த்தி பாண்டியன் வென்றார்.
மேலும் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியான போஸ்ட்மேன் என்ற மினி சிரீஸில் நடித்தார். அவர் தற்போது கொஞ்சம் பேசினால் என்ன, கண்ணகி, ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்த போது நடிகர் அசோக் செல்வனுக்கும் கீர்த்தி பாண்டியனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இதை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணம் கடந்த 13-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம், திருமணத்திற்கு பிந்தைய போட்டோஷூட் என பல புகைப்படங்களை இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கீர்த்தி பாண்டியனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 10 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவரின் சொத்துக்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.