திரையரங்குகளுக்கு மக்கள் வராததற்கு காரணம் படங்கள் அல்ல..? நடிகர் மாதவன் பேச்சால் பரபரப்பு..!

First Published Aug 17, 2022, 6:05 PM IST

தன்னுடைய அடுத்த பாலிவுட் திரைப்படமான 'டோகா: ரவுண்ட் டி கார்னர்' ரிலீசுக்கு தயாராகி வரும் மாதவன், ரசிகர்கள் ஏன்? திரையரங்கிற்கு வர தயங்குகிறார்கள் என்பது குறித்து பரபரப்பாக பேசியுள்ளார். 
 

மாதவன் நடிப்பில், கடைசியாக வெளியான 'ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்திற்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தனது  அடுத்த பாலிவுட் திரைப்படமான 'டோகா ரவுண்ட் டி கார்னர்' என்ற படத்தின் ரிலீசுக்கு தயாராகி உள்ளார் மாதவன். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தற்போது படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

அப்படி கலந்து கொண்ட ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாதவன், இந்தியாவில்...  திரையரங்குகள் ஏன் மூடப்படுகின்றன என்பது குறித்து மனம் திறந்து பேசினார். இதுகுறித்து கூறுகையில், நாட்டில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் மூடப்படுவது நல்ல திரைப்படங்கள் வெளியாகாததால் அல்ல, திரையரங்குகளின் உள்கட்டமைப்பு மோசமாக இருப்பதால் தான் என்று மாதவன் தெரிவித்துள்ளார்.

திரையரங்குகள் நஷ்டம் அடைவதற்கு முக்கியக் காரணம், தற்போது மக்கள் சிறந்த உள்கட்டமைப்பை விரும்புவதே என்றும், பழைய திரையரங்குகளால் அவற்றை வழங்க முடிவதில்லை என்றும் மாதவன் தெரிவித்துள்ளார்.
 

குறிப்பாக திரையரங்குகளுக்குச் செல்ல மக்கள் திட்டமிடும் போது,  கார் பார்க்கிங்கை விரும்புவதாகவும், பார்க்கிங்கிற்கு போதுமான இடவசதி இல்லாததாலும், சரியான உள்கட்டமைப்பு இல்லாததாலும் யாரும் தியேட்டருக்குச் செல்ல விரும்பாத சூழ்நிலைக்குக் தள்ளப்படுவதாக நடிகர் மாதவன் குறிப்பிட்டுள்ளார்.  இன்று பலரும் தங்களது சொந்த வாகனங்களில் செல்வதையே வழக்கமாக வைத்துள்ளனர். பேருந்து மற்றும் டாக்சிகளில் பயணம் செய்யும் மக்கள் குறைவாகவே உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

பழைய திரையரங்குகள் மூடப்பட்டால் தான், புதிய உள்கட்டமைப்புக்கு வழி பிறக்கும், என்றும் நடிகர் மாதவன் செய்தியாளர்களிடம் பேசிய போது தெளிவு படுத்தியுள்ளது மட்டும் இன்றி,  மக்கள் திரையரங்குகளுக்கு செல்வதை நிறுத்தியது படங்களால் அல்ல என அழுத்தமாக கூறியுள்ளார்.

click me!