
கமல்ஹாசன் கடந்த 1954-ம் ஆண்டு நவம்பர் 7-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் பிறந்தார். இவரது தந்தை மட்டுமின்றி அண்ணன்களான சாருஹாசன் மற்றும் சந்திரஹாசன் ஆகிய மூன்று பேரும் வழக்கறிஞர்கள், அதேபோல் கமலின் சகோதரி நளினி நடனக்கலைஞராக இருந்தார். சிறுவயதில் இருந்தே சினிமாவின் மீது தீராக் காதல் கொண்டிருந்த கமல்ஹாசன், இன்று 65 ஆண்டுகள் ஆகியும் அதே காதலோடு சினிமாவில் நடித்து வருகிறார். அவரைப்பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
*உலகநாயகன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசனின் இயற்பெயர் பார்த்தசாரதி. வீட்டில் அவரை இதே பெயரை சொல்லி தான் அழைப்பார்களாம்.
*நடிகர் கமல்ஹாசனின் தந்தையுடன் சுதந்திர காலகட்டத்தில் சிறை சென்றவர் யோகோப் ஹாசன். நட்பை போற்றும் விதமாக தனது நண்பனின் பெயரின் பிற்பாதியான ஹாசனை எடுத்து தன் மகனுக்கு சூட்டி அழகு பார்த்துள்ளார் கமலின் தந்தை.
*அரங்கேற்றம் செய்தபோது கமலுக்கு ஏற்பட்ட விபத்தினால் அவரால் நடனமாட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் வீட்டில் வேலை இல்லாமல் இருந்த கமல்ஹாசன் அருகில் இருந்த சலூன் கடையில் வேலை செய்ததாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாகவே வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் சலூன் கடைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாராம் கமல்.
*தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக சேர்ந்த கமல், பரதநாட்டியத்தை முறைப்படி கற்றார். இதையடுத்து நான் ஏன் பிறந்தேன் படத்தில் எம்.ஜி.ஆருக்கும், சவாலே சமாளி படத்தில் சிவாஜிக்கும் நடனப்பயிற்சி அளித்திருக்கிறார் கமல். அதேபோல் அன்புத் தங்கை படத்தில் ஜெயலலிதாவுக்கு நடனப்பயிற்சி அளித்ததும் கமல் தானாம்.
* நடிகர் கமல்ஹாசன் கதாநாயகனாக பல்வேறு படங்களில் நடித்தாலும் 1973-ம் ஆண்டு வெளிவந்த சொல்லத்தான் நினைத்தேன் திரைப்படத்தில் முதன்முறையாக வில்லனாக நடித்தார். இப்படத்தை கே.பாலச்சந்தர் இயக்கி இருந்தார்.
*வீட்டில் வேலை செய்த சிலர் தமது மகளை கடத்த முயன்றதாகவும், அதைவைத்தே மகாநதி படத்தின் கதையை தான் எழுதியதாகவும் கமல் தெரிவித்தார்.
*தமிழ் சினிமாவுக்கு ஸ்டெடி கேமராவை அறிமுகப்படுத்தியது கமல்ஹாசன் தான். முதல்முதலில் குணா படத்தில் பயன்படுத்தி இருந்தார். அதேபோல் லேப்டாப்பை முதன்முதலில் மைக்கேல் மதன காமராஜன் படம் மூலம் திரையில் காட்டியதும் கமல்ஹாசன் தான்.
*கமலின் குருதிப்புனல் படம் தான் டால்பி சவுண்ட் சிஸ்டம் அறிமுகம் செய்த முதல் தமிழ் படமாகும். பிசி ஸ்ரீராம் இயக்கிய இந்த படத்தில் கமலுடன் அர்ஜுன், கெளதமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
*அனிமேஷன் தொழில்நுட்பத்தை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய முதல் படம் கமலின் ராஜபார்வை படமாகும். இந்த படத்தில் தான் தமிழ் ரசிகர்கள் முதன்முதலில் அனிமேஷன் காட்சிகளை பார்த்து ரசித்தனர்.
இதையும் படியுங்கள்... ஞானவேல் ராஜாவுக்கு செக் வைத்த நீதிமன்றம்! 'தங்கலான்' மற்றும் 'கங்குவா'.. குறித்த நேரத்தில் ரிலீஸ் ஆகுமா?
* கமல் இயக்கத்தில் வெளியான ஹேராம், விருமாண்டி போன்ற படங்களுக்கு தனியாக டப்பிங் செய்யாமல் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே லைவ் ரெக்கார்டிங் செய்து வெளியிட்டனர். இந்த முறையில் வெளியான முதல் படம் கமலுடையது தான் என்பது கூடுதல் சிறப்பு.
*தமிழ் சினிமாவுக்கு மார்பிங் டெக்னாலஜியை அறிமுகப்படுத்தியது கமல் தான். அவரின் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் தான் அந்த தொழில்நுட்பம் முதன்முதலில் அறிமுகமானது.
*கடந்த 1986-ம் ஆண்டு வெளிவந்த விக்ரம் படத்தில் தான் ஒரிஜினல் கணினி முதன்முறையாக திரையில் காட்டப்பட்டது. இதற்காக ஆப்பிள் கம்ப்யூட்டரை வாங்கி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
*கமல்ஹாசனின் தேவர்மகன் படத்துக்கு 5 தேசிய விருதுகள் கிடைத்தன. இதில் சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருது கமலுக்கு வழங்கப்பட்டது.
*நடிகர் கமல்ஹாசனுக்கு 1990ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதேபோல் 2014-ம் ஆண்டு அவர் பத்ம பூஷண் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
* கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து 13 படங்களில் நடித்துள்ளனர். தமிழ் திரையுலகில் இரண்டும் முன்னணி கதாநாயகர்கள் இணைந்து இத்தனை படங்களில் நடித்தது இதுவே முதன்முறை.
*இந்தியில் கடந்த 1985-ம் ஆண்டு வெளிவந்த கெராப்தார் படம் தான் ரஜினியும் கமலும் கடைசியாக இணைந்து நடித்த படமாகும். அப்படத்துக்கு பின் அவர்கள் இணைந்து பணியாற்றவில்லை.
* 1982-ல் வெளியான மூன்றாம் பிறை படத்துக்காக நடிகர் கமல்ஹாசன் முதல் தேசிய விருதை பெற்றார். இப்படத்தை பாலு மகேந்திரா இயக்கி இருந்தார்.
* தமிழ் சினிமாவில் அதிக தேசிய விருதுகளை பெற்ற நடிகர் என்றால் அது கமல்ஹாசன் தான். மூன்றாம் பிறை, இந்தியன், நாயகன் ஆகிய படங்களுக்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... பிம்பத்தை காட்டி அனலை கூட்டும் தனுஷின் நாயகி - Mirror Selfieயால் ரசிகர்களை கிறங்கடிக்கும் அனுபமா பரமேஸ்வரன்!