LPG Rule Change: உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பைப்லைன் மூலம் கேஸ் (PNG) இணைப்பு பெற்றிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை மத்திய அரசு உடனடியாக நிறுத்தியுள்ளது.
ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டதை அடுத்து முக்கிய கடல்வழிப் பாதையான 'ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், இந்தியாவில் எல்பிஜி கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டு ஹோட்டல் மூடப்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த சூழலைச் சமாளிக்கும் விதமாக மத்திய அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இந்த புதிய விதிமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, வீடுகளில் பைப்லைன் மூலம் கேஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு இனி எல்பிஜி சிலிண்டர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
26
ஒரே வீட்டில் இரண்டு இணைப்புகளுக்குத் தடை!
மத்திய அரசு இந்த கடுமையான உத்தரவை நேற்று பிறப்பித்தது. இது உடனடியாக அமலுக்கும் வந்துவிட்டது. இந்த புதிய உத்தரவின்படி, ஏற்கெனவே வீடுகளில் பைப்லைன் மூலம் இயற்கை எரிவாயு (PNG) விநியோகம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு, இனி எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோகம் செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது, இனி ஒரே நபர் அல்லது ஒரே வீட்டில் எல்பிஜி மற்றும் பிஎன்ஜி ஆகிய இரண்டு இணைப்புகளையும் வைத்திருக்க முடியாது.
36
ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகைதான் மூல காரணம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் தெற்கு ஈரான் பகுதியில் அமெரிக்கா தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரின் ஒரு பகுதியாக, ஈரான் ஏற்கெனவே 'ஹார்முஸ் ஜலசந்தி' கடல் வழியை வர்த்தகக் கப்பல் போக்குவரத்துக்கு மூடியிருந்தது. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இந்த பகுதியில் பாதுகாப்பு முற்றுகையை அமல்படுத்தியுள்ளது. இந்த முக்கிய நீர்வழிப்பாதை மூடப்பட்டதால், இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் பெரும் எரிபொருள் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி-க்கு கடும் தட்டுப்பாடு
வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி கேஸ் விநியோகம் தற்போது முழுமையாக நின்றுவிட்டது. இந்த உலகளாவிய எரிபொருள் நெருக்கடியின் நேரடி பாதிப்பு இந்தியா மீது விழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வரும் நாட்களில் சமையல் எரிவாயுவுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு இந்த அவசர முடிவை எடுத்துள்ளது.
56
மத்திய கிழக்கு நாடுகளை அதிகம் நம்பியிருக்கும் இந்தியா (90% இறக்குமதி)
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2025-ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த எல்பிஜி தேவையில் 90 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், இந்தியா இறக்குமதி செய்வதில் பெரும் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. உள்நாட்டு சந்தையில் இருக்கும் கேஸ் இருப்பை, மிகவும் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கொண்டு சேர்க்கவே அரசு இந்த புதிய விதியை வகுத்துள்ளது.
66
அரசின் முன்ஜாக்கிரதை நடவடிக்கை
நாட்டில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்து, மக்களிடையே குழப்பம் ஏற்படுவதைத் தடுக்கவே அரசு இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளது. பைப்லைன் (PNG) வசதி உள்ள நகர்ப்புற மக்களுக்கு சமையல் எரிவாயுவுக்கு மாற்று வசதி உள்ளது. எனவே, சிலிண்டர் தட்டுப்பாட்டின் பாதிப்பு கிராமப்புற மற்றும் பைப்லைன் இல்லாத பகுதி மக்களை பாதிக்காமல் இருப்பதற்காக இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.