
ஊழியர்களின் நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்தவும் புதிய தொழிலாளர் சட்டத்தில் கிராஜுவிட்டி விதிகளில் மத்திய அரசு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் தகுதியான ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி பெறும் வாய்ப்பு அதிகரிக்கிறது. குறிப்பாக, நிரந்தர ஊழியர்களுடன் குறிப்பிட்ட கால ஒப்பந்த ஊழியர்களுக்கும் புதிய விதிகள் பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பணியாளர்களின் எதிர்கால நிதி பாதுகாப்பு மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்த அல்லது ஃபிக்ஸட்-டெர்ம் ஊழியர்கள் இனி ஒரு வருடம் பணியாற்றினாலே, விகிதாசார அடிப்படையில் (Pro-rata) கிராஜுவிட்டி பெற தகுதி பெறுவார்கள். இந்த புதிய விதி, குறுகிய கால ஒப்பந்தத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் நிதிப் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
நிரந்தர ஊழியர்களுக்கான கிராஜுவிட்டி விதிகளில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் கிராஜுவிட்டி பெற, ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். இந்த விதி தொடர்ந்து அமலில் இருக்கும்.
முன்பு 5 ஆண்டுகளுக்குள் வேலையை மாற்றினால் கிராஜுவிட்டி கிடைக்காது. ஆனால், புதிய விதிகளின்படி ஃபிக்ஸட்-டெர்ம் அல்லது ஒப்பந்த ஊழியர்கள் ஒரு ஆண்டு பணியாற்றினாலே, விகிதாசார அடிப்படையில் கிராஜுவிட்டி பெற தகுதி பெறுவார்கள். இதனால் அடிக்கடி வேலை மாறும் இளம் தலைமுறைக்கும் நிதிப் பாதுகாப்பு கிடைக்கும்.
கிராஜுவிட்டி செலுத்துதல் சட்டத்தின்படி, தகுதியான ஊழியருக்கு கிடைக்க வேண்டிய கிராஜுவிட்டி தொகையை நிர்வாகம் காரணமின்றி நிறுத்தி வைக்க முடியாது. ஊழியர் தனது பணிக்காலத்தை நிறைவு செய்து தகுதி பெற்றிருந்தால், விதிமுறைகளின்படி கிராஜுவிட்டி தொகையை வழங்குவது நிறுவனத்தின் பொறுப்பாகும். உரிய காரணமின்றி பணத்தை தாமதப்படுத்துவதும் சட்டப்படி சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
கிராஜுவிட்டி தொகையை ஊழியர் இழக்கச் செய்யும் வகையில் சில கடுமையான விதிமீறல்கள் இருக்கலாம். பணியிடத்தில் உடல் ரீதியான தாக்குதல், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துதல், சக ஊழியர்கள் அல்லது நிர்வாகத்தினரை மிரட்டுதல், பாலியல் துன்புறுத்தல் போன்ற தீவிரமான தவறுகளில் ஈடுபட்டால், சட்ட விதிகளுக்கு உட்பட்டு கிராஜுவிட்டி தொகை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியளவிலோ பறிமுதல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பணியிட ஒழுக்க விதிகளை ஊழியர்கள் முறையாகப் பின்பற்றுவது அவசியம். இருப்பினும், கிராஜுவிட்டியை நிறுத்துவது அல்லது பறிமுதல் செய்வது சட்டத்தில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டதே என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆம், இந்திய கிராஜுவிட்டி சட்டம் 1972, பிரிவு 4(6)-ன் கீழ், ஒரு ஊழியரின் தவறான நடவடிக்கையால் நிறுவனத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டால், அவருக்குச் சேர வேண்டிய கிராஜுவிட்டி தொகையிலிருந்து அந்த இழப்பை ஈடு செய்ய நிர்வாகத்திற்கு முழு சட்ட உரிமை உண்டு.
ஊழியரின் கவனக்குறைவு, அஜாக்கிரதை அல்லது சதிச் செயலால் நிறுவனத்தின் சொத்துக்களுக்குப் பாதிப்போ அல்லது நேரடி நிதி இழப்போ ஏற்பட்டால், அந்த இழப்பீட்டுத் தொகையை மட்டும் கணக்கிட்டு கிராஜுவிட்டியிலிருந்து பிடித்தம் செய்யலாம். மீதித் தொகை ஏதேனும் இருந்தால் அதை ஊழியருக்கு வழங்க வேண்டும்.
அதேபோல, ஒரு ஊழியர் நிறுவனத்தில் வன்முறை, ஒழுங்கீனம், மோசடி அல்லது குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் பணிநீக்கம் (Dismissal) செய்யப்பட்டால், அவரது முழு கிராஜுவிட்டி தொகையையும் நிறுத்தி வைக்கவோ அல்லது ரத்து செய்யவோ முதலாளிக்கு அதிகாரம் உள்ளது.
இருப்பினும், இந்த நடவடிக்கை தன்னிச்சையாக எடுக்கப்படக் கூடாது. இழப்பைச் சரிசெய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட ஊழியருக்கு எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பி, முறையான உள் விசாரணை நடத்தி தவறு நிரூபிக்கப்பட வேண்டியது சட்டப்பூர்வ அவசியமாகும்.
இந்திய கிராஜுவிட்டி சட்டம் 1972, பிரிவு 4(6)(b)(ii)-ன் படி, ஒரு ஊழியர் மோசடி, லஞ்சம், ஆவணங்களைத் திருத்துதல், திருட்டு அல்லது நிதி முறைகேடு போன்ற தீவிரக் குற்றங்களில் ஈடுபட்டுப் பணிநீக்கம் செய்யப்பட்டால், அவருக்குச் சேர வேண்டிய முழு கிராஜுவிட்டி தொகையையும் பறிமுதல் செய்ய நிறுவனத்திற்கு முழு சட்டப் பாதுகாப்பு உள்ளது.
இத்தகைய குற்றச்செயல்கள் சட்டத்தின் பார்வையில் 'நெறிமுறைத் தவறு' (Moral Turpitude) என்று வகைப்படுத்தப்படுகின்றன. இதனால் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, அல்லது பெரும் இழப்பாக இருந்தாலும் சரி, நிர்வாகம் விரும்பினால் ஊழியரின் முழு கிராஜுவிட்டியையும் ரத்து செய்ய முடியும்.
ஆனால், இந்த நடவடிக்கையை நேரடியாக எடுக்க முடியாது. நிறுவனத்தின் சட்டவிதிகளின்படி முறையான உள் விசாரணை (Departmental Inquiry) நடத்தப்பட்டு, குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும். விசாரணைக்குப் பிறகு ஊழியர் அதிகாரப்பூர்வமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டால் மட்டுமே இந்த கிராஜுவிட்டி பறிமுதல் செல்லுபடியாகும்.
ஊழியர் மீது குற்றச்சாட்டு இருந்தாலும், நிறுவனம் தன்னிச்சையாக கிராஜுவிட்டி தொகையை நிறுத்த முடியாது என்பது முக்கியமான பாதுகாப்பாக பார்க்கப்படுகிறது. உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். முதலில் ஊழியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, தனது தரப்பு பதிலை அளிக்க நியாயமான வாய்ப்பு வழங்க வேண்டும். அதன்பிறகே விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்திய கிராஜுவிட்டி சட்டம் 1972, பிரிவு 4(6)(a)-ன் படி, ஒரு ஊழியரின் கவனக்குறைவு அல்லது தவறான செயலால் நிறுவனத்திற்கு ஏற்பட்ட உண்மையான நிதி இழப்பை (Actual Financial Loss) மட்டுமே கிராஜுவிட்டியிலிருந்து பிடித்தம் செய்ய முடியும். உதாரணத்திற்கு, நிறுவனத்திற்கு ரூ. 50,000 மட்டுமே இழப்பு என்றால், அந்தத் தொகையை மட்டுமே பிடிக்க முடியும்; அதைத் தாண்டி அபராதமாகவோ அல்லது கூடுதலாகவோ ஒரு ரூபாயைக் கூடப் பிடிக்கச் சட்டத்தில் இடமில்லை.
அவ்வாறு உண்மையான இழப்பீட்டுத் தொகையைப் பிடித்தம் செய்தது போக, மீதமுள்ள கிராஜுவிட்டி தொகையை ஊழியருக்கு வழங்க வேண்டியது நிறுவனத்தின் சட்டப்பூர்வக் கடமையாகும். ஊழியர் பணியிலிருந்து விலகிய அல்லது பணிநீக்கம் செய்யப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் இந்த மீதித் தொகையை நிர்வாகம் வழங்கிவிட வேண்டும் (பிரிவு 7(3)).
ஒருவேளை நிறுவனம் இந்த மீதித் தொகையை 30 நாட்களுக்குள் வழங்காமல் தாமதப்படுத்தினால், தாமதமான காலத்திற்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள வட்டியுடன் சேர்த்து (Simple Interest) அத்தொகையை ஊழியருக்கு வழங்க வேண்டும் (பிரிவு 7(3A)). முறையான விசாரணை இன்றி தன்னிச்சையாக முழுத் தொகையையும் நிறுத்தி வைப்பதோ அல்லது தாமதப்படுத்துவதோ சட்டப்படி குற்றமாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.