இந்தியாவில் புல்லட் ரயில் செயல்பாட்டுக்கு வந்தால் ஜப்பான், சீனா, பிரான்ஸ் போன்ற அதிவேக ரயில் சேவை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் விரைவில் இணையும். இது நாட்டின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைக்கு மிகப்பெரிய உந்துதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழுத் திட்டமும் 2029-ல் நிறைவடையும் என்றாலும், அதன் முதல் பகுதி இன்னும் சில வருடங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. குஜராத் மாநிலத்தின் சூரத் மற்றும் பிலிமோரா இடையேயான 50 கி.மீ தூரத்திற்கான புல்லட் ரயில் பாதை 2027-ல் திறக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
10 நிமிடத்தில் 50 கிமீ போகலாம்
தற்போது இந்த 50 கி.மீ தூரத்தைக் கடக்க ரயிலில் சுமார் 45 நிமிடங்கள் முதல் ஒன்றரை மணி நேரம் வரை ஆகிறது. ஆனால், புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்ட பிறகு, இந்த பயண நேரம் வெறும் 9 முதல் 10 நிமிடங்களாகக் குறையும் என்பதுதான் இதில் ஆச்சரியமான விஷயம். குஜராத் மாநில மக்கள்தான் இந்த அதிவேக பயணத்தை இந்தியாவில் முதன்முதலில் அனுபவிக்கப் போகிறார்கள்.