Importance of Stones on Railway Tracks: ரயில் தண்டவாளங்களுக்கு நடுவில் ஜல்லி கற்கள் பரப்பி இருப்பதை பார்த்திருப்போம். இது எதுக்குனு எப்போதாவது யோசிச்சிருக்கீங்களா? இந்த ஜல்லிக்கற்களுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் என்னன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
ஒரு ரயில் பொதுவாக நூற்றுக்கணக்கான டன் எடை கொண்டது. அந்தப் பெரிய பாரம் முழுவதும் தண்டவாளத்தில் இறங்காமல், அந்த அழுத்தத்தை இந்த ஜல்லிக்கற்கள் சீராகப் பிரித்து பூமிக்கு அனுப்புகின்றன. ஒருவேளை இந்தக் கற்கள் இல்லை என்றால், ரயிலின் பாரத்தால் தரைப்பகுதி தாழ்ந்துபோகவோ அல்லது தண்டவாளங்கள் வளைந்துவிடவோ வாய்ப்புள்ளது.
ரயில்கள் அதிவேகத்தில் செல்லும்போது கடுமையான அதிர்வுகள் ஏற்படும். அந்த நேரத்தில் தண்டவாளங்கள் நகரக் கூடாது. இந்த ஜல்லிக்கற்கள், தண்டவாளத்தின் கீழ் உள்ள கட்டைகளை (Sleeper) இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, டிராக்கை நிலையாக வைத்திருக்க உதவுகின்றன. இவை இல்லையென்றால், ரயில் பயணத்தின்போது டிராக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மழைக்காலங்களில் தண்டவாளங்களுக்கு இடையில் தண்ணீர் தேங்காமல் வெளியேற இந்தக் கற்கள் உதவுகின்றன. சாதாரண மண் அல்லது மணலைக் கொண்டு டிராக் அமைத்தால், மழைநீர் தேங்கி தரைப்பகுதி சேதமடையும். ஆனால், ஜல்லிக்கற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகள் மூலம் தண்ணீர் எளிதாகக் கீழே வடிந்துவிடுவதால், டிராக்கின் அடித்தளம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது.
தண்டவாளத்தைச் சுற்றி புல், செடி, கொடிகள் வளர்வதை இந்தக் கற்கள் தடுக்கின்றன. சாதாரண நிலமாக இருந்தால், செடிகள் வேகமாக வளர்ந்து டிராக்கைப் பாதிக்கும். செடிகளின் வேர்கள் டிராக்கின் கட்டமைப்பைப் பலவீனப்படுத்தக்கூடும். ஆனால், ஜல்லிக்கற்கள் இருப்பதால், செடிகள் வளர்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.
ரயில் பயணத்தின்போது ஏற்படும் அதிர்வுகளையும், சத்தத்தையும் குறைப்பதிலும் இந்த ஜல்லிக்கற்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ரயில் சக்கரங்கள் தண்டவாளத்தில் உருளும்போது உருவாகும் ஆற்றலை இந்தக் கற்கள் ஓரளவு உறிஞ்சிக்கொள்கின்றன. இதற்காக சாதாரண கற்களைப் பயன்படுத்தாமல், கிரானைட் போன்ற வலிமையான, கடினமான கற்களைத் தேர்வு செய்து பயன்படுத்துகிறார்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.