சொகுசு கார்களைத் திருடி போதைப் பொருள் கும்பலுக்கு விற்ற 4 பேர் கைது

By SG BalanFirst Published Mar 19, 2023, 10:27 PM IST
Highlights

டெல்லியில் காரைத் திருடி வெளி மாநிலங்களுக்கு விற்றுவந்த திருட்டு கும்பலைச் சேர்ந்த நால்வரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

சொகுசுக் கார்களை திருடி விற்பனை செய்துவந்த கும்பலில் தொடர்புடைய நான்கு பேரை டெல்லி காவல்துறை சனிக்கிழமை கைது செய்துள்ளது. இந்தக் கும்பல், திருடப்பட்ட வாகனங்களை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிக விலைக்கு விற்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

பிப்ரவரி 18ஆம் தேதி விஜய் நகரில் திருடப்பட்ட ஃபார்ச்சூனர் காரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வாஹித், ஷௌகீன், ராஜேஷ் சர்மா மற்றும் மஹாபீர் பிரசாத் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். "காரைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சனிக்கிழமை, விஜய் நகர் பகுதியில் நடமாடுவது குறித்து எங்களுக்கு ஒரு ரகசியத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் தடுப்புகள் அமைத்து சோதனைகள் மேற்கொண்டோம். அப்போது திருட்டுப்போன ஃபார்ச்சூனர் கார் மற்றும் மற்ற மூன்று கார்களுடன் நான்கு பேர் பிடிபட்டனர்" என்று நகர காவல்துறை டிசிபி நிபுன் அகர்வால் கூறுகிறார்.

காதலை எதிர்த்த அண்ணனை வெட்டிக் கூறு போட்ட தங்கை 8 ஆண்டுகளுக்குப் பின் கைது!

பிடிபட்டவர்கள் தங்களுடன் மேலும் இரண்டு பேர் உள்ளதாகவும் அவர்களுடன் சேர்ந்து தலைநகர் டெல்லியில் ஆடம்பரமான காலனிகளுக்குச் சென்று சொகுசு கார்களை திருடிவந்ததாகவும் கூறியுள்ளனர். இவர்கள் திருடிய கார்களில் நம்பர் பிளேட்டுகளை மாற்றி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்கிறார்கள். கடந்த சில மாதங்களாக காசியாபாத் பகுதியில் இந்த கும்பல் இதே வேலையாக இருந்துவந்ததாக டிசிபி நிபுன் சொல்கிறார்.

இந்த திருடப்பட்ட வாகனங்கள் பெரும்பாலும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வைரக் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு விற்கப்பட்டுள்ளன. "இந்தக் கும்பல் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் போதைப்பொருள் மற்றும் வைரக் கடத்தலில் ஈடுபட்ட நபர்களுக்கு கார்களை விற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இவர்களிடம் கார்களை வாங்கிய வாடிக்கையாளர்களைப் பற்றி அறிய முயற்சி செய்கிறோம். இந்தத் வாகனத் திருட்டு கும்பலைச் சேர்ந்த மற்ற இருவரையும் கண்டுபிடித்து கைது செய்யவும் குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று காவல்துறை ஏசிபி அனுஷ் ஜெயின் தெரிவிக்கிறார்.

அய்யப்பன் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக TTF வாசன் மீது வழக்குப்பதிவு

click me!