கல்லூரி மாணவி கழுத்தறுத்துக் கொலை … திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கொல்லப்பட்டதற்கான அதிர்ச்சி காரணம் !!

By Selvanayagam PFirst Published Apr 7, 2019, 7:02 AM IST
Highlights

பொள்ளாச்சி அருகே கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்ட கல்லூரி மாணவி பிரகதிக்கு வரும் ஜுன் மாதம் திருமணம் ஆக உள்ள நிலையில்  ஒரு தலைக் காதலால் அவர் கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். 

கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். மாணவியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் மாணவியின் பெற்றோரும், கல்லூரி நிர்வாகத்தினரும் மாணவியை தேடினார்கள். 

ஆனால் மாணவி தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். காட்டூர் போலீசார் மாணவி மாயம் என்று வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டியில் ரோட்டோரத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நேற்று மாலை 4 மணிக்கு அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து கோமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இதற்கிடையில் ஓட்டன்சத்திரத்தில் இருந்து அந்த வழியாக காரில் கேரளா மாநிலம் சாலக்குடிக்கு சென்ற கோமதி என்ற பெண் ரோட்டோரத்தில் பொதுமக்கள் கூட்டமாக நிற்பதை பார்த்தார். இதையடுத்து தனது கணவர் கார்மேகத்தை காரை நிறுத்தி சொல்லி விட்டு, இறங்கி சென்று பார்த்தார். 

அப்போது அவர் இறந்து கிடப்பது தனது சொந்த ஊரான ஓட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்த வெள்ளைசாமி என்பவருடைய மகள் பிரகதி என்று உறுதி செய்தார். இதை தொடர்ந்து போலீசார் மாணவியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் பூசாரிபட்டிக்கு விரைந்து வந்தனர். தங்களுடைய மகள் பிரகதிதான் என்பதை அறிந்து கதறிதுடித்தனர்.மாணவியை மர்ம ஆசாமிகள் காரில் கடத்திச்சென்று கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மாணவி பிரகதி உறவினர் நாட்டுதுரை என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆகவே அவர்களுக்கு திருமணம் செய்ய, கடந்த 2 மாதங்களுக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதம் 13-ந்தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்தநிலையில் மாணவி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் அவருக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை நாட்டுத்துரை ஆகியோர் கதறி அழுதனர். பிரகதி கழுத்தில் கிடந்த நகை, காதில் இருந்த கம்மல் ஆகியவை திருடுபோகவில்லை. இதன் காரணமாக இந்த கொலை நகைக்காக நடக்கவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

அவரது கழுத்து அறுக்கப்பட்டு, ஆடைகள் கலைந்த நிலையில் கிடந்து உள்ளார். எனவே அவரை மர்ம ஆசாமிகள் கல்லூரியில் இருந்து வெளியே வந்த போது காரில் கடத்தி சென்று, கொன்று உடலை பூசாரிபட்டியில் வீசி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இதற்கிடையில் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் காரில் மாணவியை கடத்தி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணையில் கல்லூரி மாணவி பிரகதியை ஒரு தலையாக காதலித்து வந்த 2 பேர் தான் இந்த படுகொலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே பொள்ளாச்சியில் ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டி பாலியல்பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கல்லூரி மாணவி கடத்திச்செல்லப்பட்டு பொள்ளாச்சி பகுதியில் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!