திருச்சி விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கொலை விவகாரம்; சிறுவன் உள்பட 6 பேர் கைது

By Velmurugan sFirst Published May 4, 2023, 12:47 PM IST
Highlights

திருச்சி அருகே  விவசாயிகள் இயக்க மாநில செயலாளர் கொலை விவகாரத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், சிறுவன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையம் கிழக்கு காலனியில் வசித்து வந்தவர் சண்முகசுந்தரம் (வயது 60). இவர் தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில செயலாளராக பதவி  வகித்து வந்தார். இவருடைய முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இரண்டாவது மனைவி வளர்மதி கோபித்துக் கொண்டு தனது அண்ணன்  வீட்டுக்கு சென்று விட்டார். 

இந்நிலையில் பி கே அகரத்தைச் சேர்ந்த இவரது அக்கா மகன் ஆனந்த் தினமும் சண்முகசுந்தரத்திற்கு மூன்று வேளையும் சாப்பாடு கொடுத்து வந்துள்ளார். கடந்த 29ம் தேதி இரவு ஆனந்த் சண்முகசுந்தருக்கு சாப்பாடு கொடுத்து விட்டு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து தனியாக இருந்த  சண்முகசுந்தரம் வீட்டிற்கு கடந்த 30ம் தேதி அதிகாலை வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

மறுநாள் காலை வழக்கம் போல் சாப்பாடு கொடுக்க வந்த போது சண்முகசுந்தரம் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இது குறித்து சிறுகனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு விசாரணை செய்தனர். மேலும் இந்த வழக்கில் கொலையாளிகளை பிடிப்பதற்காக திருச்சி மாவட்ட காவல் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்படி  லால்குடி துணை சூப்பிரண்டு அஜய்தங்கம் தலைமையில் சிறுகனூர், சமயபுரம், லால்குடி காவல் ஆய்வாளர்கள். கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

கோவை குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்ட அரிய வகை வெள்ளை நிற பாம்பு வனத்தில் விடுவிப்பு

இந்நிலையில் எம்.ஆர்.பாளையம் பகுதியில் உள்ள அரசு நிலம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், சண்முகசுந்தரத்திற்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக நேற்று முன்தினம்  திருச்சி கீழப்புலிவார்டு சாலையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்ல நீதிமன்றத்தில் சிறுவன்  சரணடைந்தான். மேலும்  இந்த கொலை வழக்கில் விசாரணை முடுக்கி விடப்பட்டு மற்ற குற்றவாளிகளை தேடி வந்தனர். 

காவல் துறையினர் தீவிரமாக தேடி வருவதை அறிந்த  சணமங்கலம் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகன், எம் ஆர் பாளையம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ், கார்த்திகேயன், சண்முகவேல், இளவரசன் ஆகிய ஐந்து பேரும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கப்பட்டு சணமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தில்  சரணடைந்தனர். இதனைத் தொடர்ந்து எதிரிகள் ஐந்து பேரையும் கிராம நிர்வாக அலுவலர் சிறுகனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 

கோவிந்தா முழக்கம் விண்ணை பிளக்க கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்ற மதுரை மக்கள்

காவல் துறையினரின் விசாரணையில் பல வருடங்களாக அரசு நீளம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததில் முன்விரோதம் காரணமாக சிறுவன் உட்பட ஐந்து பேரும் கூட்டு சதி செய்து திட்டமிட்டு சண்முகத்தை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. மேலும் குற்றவாளிகள் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், பிச்சுவாகத்தி, இரண்டு மோட்டார் பைக் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து சனமங்கலம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரத்தின் உறவினரான ஆனந்த் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த சிறுகனூர் காவல் துறையினர் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

click me!