யுவன் சங்கர் ராஜா போட்ட அந்த பதிவு..! ரசிகர்கள் செய்த செயலால்... சுவர் இடிந்து விழுந்து 6 பேர் காயம்!

By manimegalai aFirst Published Oct 8, 2022, 7:51 PM IST
Highlights

யுவன் ஷங்கர் ராஜா இசை நிகழ்ச்சியில் சுவர் இடிந்து விழுந்து பெண் உதவி காவல் ஆய்வாளர் உட்பட 6 பேர் காயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தமிழ் சினிமா ரசிகர்களை, தன்னுடைய மெல்லிசையில் கட்டி போட்டவர் யுவன் ஷங்கர் ராஜா. இவருடைய இசைக்கென பல வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். இவர் இளையராஜாவின் மகன் என்கிற அடையாளத்தை மறைத்து, தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார். சினிமா பாடங்களுக்கு இசையமைப்பதை தொடர்ந்து, ரசிகர்களின் ஆசைக்காக அவ்வப்போது சில இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே...

அந்த வகையில் கோவை சரவணம்பட்டி பகுதியில்  SNS கலை அறிவியல் கல்லூரியில், இசையமைப்பாளர் யுவன்சங்கர் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளதாக யுவன்சங்கர் ராஜா ஏற்கனவே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட்ட தகவல் மற்றும் முதலில் வரும் ஆயிரம் பேருக்கு இலவச அனுமதி என்ற விளம்பரத்தை பார்த்து சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  அங்கு கூடினர். 

மேலும் செய்திகள்: யுவன் சங்கர் ராஜாவின் இசை கச்சேரியால் ஏற்பட்ட விபரீதம்..! 5 பேர் காயம்..? என்ன நடந்தது முழு விவரம் இதோ...

இந்நிலையில் அதிகபடியாக வந்த கூட்டத்தால் அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனலும் நிகழ்ச்சியை காண வந்தவர்கள் அங்கிருந்த கல்லூரி சுற்றுச்சுவர் மீது ஏறியும் உள்ளே செல்ல முயன்றதாக கூறப்படுகின்றது.  இதில் ஏராளமானோர் சுற்றுச்சுவர் மீது ஏறிச் செல்ல முயன்ற நிலையில் ,திடீரென சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு பெண் உதவி ஆய்வாளர் பிலோமினா என்பவரும் 5 மாணவர்களும் என  6 பேர்  காயமடைந்தனர். 

மேலும் செய்திகள்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - தனுஷ் மீண்டும் இணைகிறார்களா? என்ன தான் நடக்கிறது... கஸ்தூரி ராஜா கூறிய தகவல்..!

சுவர் இடிந்ததையும் கவனிக்காமல் பலர் விழுந்தவர்கள் மீதே ஏறிச் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது.  இதையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கு அதிக கூட்டம் வரும் என்பதால் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதா? என்பது குறித்தும் அனைத்து துறைகளிடமும் உரிய அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்தும் சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

click me!