TVK VIJAY : அப்போ ஜிஎஸ்டி... இப்போ நீட்... பாஜகவிற்கு எதிராக அதிரடியாக களம் இறங்கிய விஜய்- நடக்கப்போவது என்ன.?

By Ajmal KhanFirst Published Jul 3, 2024, 11:24 AM IST
Highlights

மெர்சல் படத்தின் மூலம் ஜிஎஸ்டிக்கு தனது எதிர்ப்பை பதிவி செய்த விஜய்க்கு எதிராக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது அரசியலில் கால் எடுத்த வைத்துள்ள விஜய் நீட் தேர்விற்கு எதிராக குரல் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யும் அரசியலும்

நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தில் அறிமுகமாகி இன்று நாளைய தீர்ப்புக்காகவே விஜய் காத்துள்ளார். தனது அரசியல் பயணத்தை 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலோடு தொடங்கவுள்ளார். இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மெல்ல, மெல்ல அரசியல் பயணத்திற்கான அறிகுறியை வெளியே காட்ட தொடங்கிவிட்டார். குறிப்பாக தனது திரைப்படங்களில் மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்து வந்துள்ளார். குறிப்பாக சர்க்கார் படத்தில் தமிழக அரசு கொடுக்கும் இலவச பொருட்களுக்கு எதிராக குரல் கொடுத்தார். லஞ்சம் ஊழல் தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார். தலைவா என்ற படத்திலும் அரசியலுக்கு வருவதை வெளிக்காட்டி இருந்தார்.

 

ஜிஎஸ்டி பேச்சு - பாஜக எதிர்ப்பு

இதனையடுத்து மெர்சல் படத்தில் மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டிக்கு எதிராக குரல் கொடுத்தார். இந்த பேச்சுக்கு அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் மெர்சல் திரைப்படம் வெளியாகும் திரையரங்கு முன்பு போராட்டமும் நடத்தினர். இதனால் இந்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய் மத்திய அரசை ஒன்றிய அரசு என விமர்சித்தது மட்டுமில்லாமல் நீட் தேர்விற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக விஜய்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், நீட் தேர்வு மீது நம்பிக்கை இல்லையெனவும் விஜய் தெரிவித்துள்ளார். எனவே ஒன்றிய அரசு நீட் தேர்வை விலக்க வேண்டும் என விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய பாஜக அரசுக்கு எதிராக விஜய் களம் இறங்கி இருப்பது அக்கட்சி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவிற்கு எதிராக நிலைப்பாடு எடுத்தால் மட்டுமே வாக்குகளை கவர முடியும் என்பதால் விஜய் இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 

click me!