துபாயில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதிக்கு (Vijay Sethupathi) சினிமாத்துறையில் செல்வாக்கு மிகுந்த நட்சத்திர விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. வில்லன், கதாநாயகன், குணசித்திர வேடம், என எது கொடுத்தாலும் அதற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்து பான் இந்தியா நடிகராக வலம் வருகிறார்.
தற்போது இவர் கைவசம் காத்துவாக்குல ரெண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், கடைசி விவசாயி, விடுதலை, இடம் பொருள் ஏவல், விக்ரம், மெர்ரி கிறிஸ்துமஸ், மும்பைகார், காந்தி டாக்ஸ் என டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, சினிமாவில் நடிக்க வரும் முன் துபாய்யில் வேலை பார்த்துள்ளார். தற்போது அதே ஊரில் நடிகர் விஜய் சேதுபதிக்கு சினிமாத்துறையில் செல்வாக்கு மிகுந்த நட்சத்திர விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது.
துபாயில் சர்வதேச புரமோட்டர்ஸ் சங்கத்தின் சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் 50-வது பொன்விழா மற்றும் செல்வாக்கு மிகுந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தான் விஜய் சேதுபதிக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சினிமாவுக்கு வரும் முன் தான், 3 ஆண்டுகள் துபாயில் பணியாற்றி இருப்பதாகவும், இதனால் துபாய்க்கு வரும்போதெல்லாம் வெளிநாடு போன்ற உணர்வு இல்லாமல், தனது 2-வது தாயகமாக பார்ப்பதாக நடிகர் விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் கூறினார்.