திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் ஆளாக வந்து வாக்களித்து சென்ற நிலையில், நடிகர் விஜய் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார்.
தமிழகத்திலுள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் அஜித் இன்று வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பே முதல் ஆளாக வந்து சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடிக்கு தனது வாக்கை பதிவு செய்ய வந்திருந்தார். காலை 7.15 மணிக்கு அஜித் , அவரின் மனைவி ஷாலினி தங்களது வாக்கை பதிவிட்டனர்.
அஜித் வருகிறார் என்றதும் அவரது ரசிகர்கள் வாக்குப் பதிவு மையத்தின் முன் திரளாக திரண்டிருந்தனர். தனது மனைவியுடன் வாக்குப்பதிவு செய்ய வந்த அஜித்தை பார்த்தவுடன் ரசிகர்கள் தல தல என்று கத்தி ஆரவாரம் செய்தனர். இதனைப்பார்த்த அஜித், கையெடுத்து கும்பிட்டு நகர்ந்து செல்லுங்கள் என கூறியுள்ளார்.
இதேபோல் நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க மக்களோடு மக்களாக வரிசையில் நின்றார். அங்கு கூட்டம் அதிகமாக இருந்தும் நடிகர் விஜய் 10 நிமிடத்திற்கும் மேலாக வரிசையில் பொறுமையாக நின்று தனது வாக்கை பதிவு செய்தார். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 7.45 மணிக்கு தனது வாக்கை விஜய் பதிவு செய்தார் .