எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்... சற்று முன் மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 17, 2020, 6:37 PM IST
Highlights

எஸ்.பி.பி. உடல்நிலை தேறிவருவதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் கவலைக்கிடம் என மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை குடும்பத்தாரையும், திரையுலகினரையும், ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். தன்னை மருத்துவர்கள் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள கூறியதாகவும், ஆனால் குடும்பத்தினர் நலன் கருதி மருத்துவமனைக்கு வந்ததாகவும் கூறினார். தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும்,  மருத்துவர்கள் தன்னை ஓய்வில் இருக்க சொல்லியுள்ளதால் யாரும் எனக்கு போன் செய்ய வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். 

கடந்த 14ம் தேதி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின்  உடல்நலம் திடீர் என்று மோசமடைந்து விட்டதாகவும், மருத்துவ நிபுணர்களின் அறிவுரையின்படி அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது” என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் எஸ்.பி.பி. நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென பிரார்த்தனை செய்தனர். 

இதனிடையே கடந்த சனிக்கிழமை முதலே எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து நல்ல செய்திகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி மயக்கத்திலிருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் கண் விழிந்து விட்டார் என்ற செய்தி வெளியானது. நேற்று தந்தையின் உடல்நிலை குறித்து எஸ்.பி.பி.சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அப்பாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் இப்போது மயக்கத்தில் இல்லை. தனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை அடையாளம் கண்டுகொள்கிறார். தற்போது அவருக்கு சுவாசிப்பதில் சிக்கல் எதுவும் இல்லை. இருப்பினும் அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தம்ஸ் அப் காட்டும் அளவிற்கு அவருடைய உடலில் அசைவுகள் ஆரம்பித்துள்ளன. அடுத்து வரும் நாட்களில் அப்பா பூரண குணமடைந்து விரைவில் பழைய நிலைக்கு திரும்புவார் என நம்பிக்கையாக கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா  தொற்றுக்காக எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில், செயற்கை சுவாசக் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது. எஸ்.பி.பி. உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்.பி.பி. உடல்நிலை தேறிவருவதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் கவலைக்கிடம் என மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை குடும்பத்தாரையும், திரையுலகினரையும், ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 
 

click me!