“பாலு உங்களுக்காக இசை உலகம் காத்துக்கிடக்கிறது... மீண்டு வா”.... வைரமுத்து உருக்கம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 17, 2020, 5:54 PM IST
Highlights

இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து எஸ்.பி.பி. உடல் நலம் பெற வேண்டி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். தன்னை மருத்துவர்கள் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள கூறியதாகவும், ஆனால் குடும்பத்தினர் நலன் கருதி மருத்துவமனைக்கு வந்ததாகவும் கூறினார். தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும்,  மருத்துவர்கள் தன்னை ஓய்வில் இருக்க சொல்லியுள்ளதால் யாரும் எனக்கு போன் செய்ய வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். 

கொரோனாவால் தொடர் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கடந்த 14ம் தேதி மோசமான நிலையை எட்டியது. செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் நிலை உருவானது. இதைக்கேள்விப்பட்ட இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், சித்ரா, தனுஷ், அனிருத் உள்ளிட்ட திரைத்துறையினர் முதற்கொண்டு ரசிகர்கள் வரை எஸ்.பி.பி. விரைவில் வீடு திரும்ப வேண்டுமென பிரார்த்திக்க ஆரம்பித்தனர். 

இன்று காலையில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டிருந்த வீடியோவில், இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலால் பாடி, கோடி கோடி ரசிகர்களை மகிழ்வித்த, மதிப்பிற்குரிய எஸ்.பி.பி.அவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அபாயகட்டத்தை தாண்டிவிட்டார் என கேள்வி பட்டதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி. இன்னும் தீவிர சிகிச்சையில் இருக்கும் எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்" என வாழ்த்து கூறினார். 

இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து எஸ்.பி.பி. உடல் நலம் பெற வேண்டி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இசை உலகை நீங்கள் ஆண்டு வர வேண்டும். என் முதல் பாடல் பாடியவன் நீ. என் கடைசி பாடலையும் நீ தான் பாட வேண்டும். மேகங்கள் வந்து வந்து போகும், வானம் நிரந்தரம். இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என்று மாறி மாறி நிகழ்ந்த என் கலை வாழ்வில் மாற கலைஞன் நீ. மீண்டு வருவாய். இசை உலகை ஆண்டு வருவாய் என வாழ்த்து கூறிய வைரமுத்து, , “காதல் ரோஜா” என்ற பாடலை மாற்றி   “பாடல் ராஜாவே எங்கே நீ எங்கே. கண்ணீர் வழியுது அய்யா இங்கே” என உருக்கமாக பாடியுள்ளார். இறுதியாக  பாலு உங்களுக்காக இசை உலகம் காத்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

click me!