Singer Bhavatharini : பிரபல பாடகி பவதாரிணி நேற்று இலங்கையில் இறந்த நிலையில், அவரது உடை இப்பொது சென்னையில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தேசிய விருது வென்ற மாபெரும் பாடகியான பவதாரிணி மறைவு ஒட்டுமொத்த திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக புற்றுநோயோடு அவதிப்பட்டு வந்த பவதாரிணி அவர்களுக்கு ஆயுர்வேத முறையில் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் நேற்று ஜனவரி 25ஆம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
இதனையடுத்து இலங்கையில் இருந்து அவரது உடலை சென்னை கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் யுவன் சங்கர் ராஜா தனது சகோதரியின் உடலோடு சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த நிலையில் தற்பொழுது சென்னை டி. நகரில் உள்ள இசைஞானி இளையராஜா அவர்களுடைய இல்லத்திற்கு பவதாரிணி உடல் கொண்டுவரப்பட்டுள்ளது.
பாரதிராஜா அவர்களுடைய மகனும் நடிகருமான மனோஜ், இயக்குனர் வெங்கட் பிரபு, அவருடைய சகோதரர் பிரேம்ஜி மற்றும் பலர் தற்பொழுது இளையராஜாவின் வீட்டில் மறைந்த பாடகி பவதாரிணி அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளனர். பொதுமக்கள் அஞ்சலிக்காக இளையராஜாவினுடைய வீட்டில் அவருடைய உடல் வைக்கப்படும்.
மேலும் பவதாரிணி உடல் தேனி மாவட்டத்தில் உள்ள இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்தில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என்று தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று இரவு 10 மணிக்கு மேல் சாலை மார்கமாக பாவதாரிணியின் உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படுகிறது. சொந்த ஊரில் இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.