சொன்னபடியே ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டி.ஆரும் அவரது மகன் சிம்புவும் வீட்டின் முன்பாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அவர்களைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கருப்புச்சட்டை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த சிம்புவும் டிஆரும், இன்று மாலை 5 மணி முதல் 5.10 வரை கருப்புச்சட்டை அணிந்து மவுனப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அந்த அடிப்படையில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதையொட்டி போக்குவரத்தில் மாற்றங்களை போலீசார் செய்துள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் குவிந்து பீட்டா அமைப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். அனைவரும் அமைதி காக்க வேண்டும் என, இளைஞர்களை சிம்பும் டிஆரும் அவ்வப்போது கேட்டுக் கொண்டு வருகின்றனர். இதற்கிடையே போராட்டத்தில் இயக்குனர் ராம் இணைந்துள்ளார்.