பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த எதற்கும் துணிந்தவன் படக்குழு, பின்னர் முடிவை மாற்றியது. பிப்ரவரி 4-ந் தேதி வெளியிடப்படும் என அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம்வருபவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் நடித்த சூர்யா தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வில்லனாக வினய் நடிக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தை பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழு, பின்னர் முடிவை மாற்றியது. பிப்ரவரி 4-ந் தேதி வெளியிடப்படும் என அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸை தள்ளிவைத்தற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் தான் என கூறப்படுகிறது. பொங்கலன்று அஜித் நடித்துள்ள வலிமை படம் ரிலீஸாக உள்ளது. அப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதேபோல் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் வெளியீட்டு உரிமையையும் உதயநிதி தான் கைப்பற்றி உள்ளாராம்.
இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீசானால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதோடு, வசூலிலும் அடிவாங்கும் என்பதால் எதற்கும் துணிந்தவன் படத்தின் வெளியீட்டை பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைத்து விட்டார்களாம்.