கெத்தாக வீடு திரும்பிய ரஜினி… ஆரத்தி எடுத்து வரவேற்ற குடும்பம்!!

By Narendran SFirst Published Nov 1, 2021, 12:25 PM IST
Highlights

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் தனது உடல் நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

டெல்லியில் கடந்த 25 ஆம் தேதி தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தனது வாழ்நாள் சாதனைக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய ரஜினிகாந்த் தனது பேரக்குழந்தைகளுடன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள அண்ணாத்த திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தார். இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி ரஜினிகாந்தின் உடல்நிலை சரியில்லாமல் போனது. மயக்கம், தலைச்சுற்றல் காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், மூளைக்கு செல்லும் கழுத்துப் பகுதியில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, அடைப்பை சரிசெய்தனர். அவருக்கு ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இதனிடையே அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிராத்தனையில் ஈடுபட்டனர். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து கேட்டு அறிந்தார். பின்னர் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து நேற்று இரவு அவர் வீடு திரும்பினார். காரில் வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்துக்கு அவரது மனைவி லதா ரஜினிகாந்த் வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்து வரவேற்றார். அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்களை பார்த்து ரஜினிகாந்த் கையசைத்தவாறு வீட்டிற்குள் சென்றார். ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து பல்வேறு வதந்திகளும் வெளியாகிவந்த நிலையில் அவர் பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், ஆரவாரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் தான் நலமாக இருப்பதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் வணக்கம், சிகிச்சை முடிந்தது. நான் நல்லா இருக்கேன். இரவுதான் வீட்டுக்கு வந்தேன். நான் நலமுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்த நல் உள்ளம் கொண்ட ரசிக பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் உடல் நலம் குறித்து விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

click me!