மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினி... வீட்டில் பூசணி சுற்றி திரிஷ்டி கழித்த குடும்பத்தினர்..!

By Asianet TamilFirst Published Oct 31, 2021, 10:29 PM IST
Highlights

ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட தடை காரணமாக பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் ரஜினி இருந்தார் என்பது தெரிய வந்தது. இந்தச் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் கடந்த இரு நாட்களாக ரஜினி இருந்தார்.

சென்னை கேவேரி மருத்துவமனையில் ரத்த நாள சிகிச்சை முடிந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தீபாவளிக்கு ’அண்ணாத்த’ படம் வெளிவரும் நிலையில், கடந்த 28-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் படத்தைப் பார்த்தார். தன் பேரக்குழந்தைகளுடன் படம் பார்த்தது குறித்து ரஜினி ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார். ஆனால், அன்றைய தினம் மாலைக்கு மேல் நடிகர் ரஜினிகாந்த் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் முழு உடல் பரிசோதனை முடிந்ததும் ரஜினி வீடு திரும்புவார் என்றும் ரஜினி மனைவி லதா தெரிவித்திருந்தார்.

ஆனால், ரஜினிகாந்த்திற்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் ரஜினிக்கு பக்கவாதம் ஏற்பட்டிருப்பதாகவும் வெளியான தகவலால் அவருடைய ரசிகர்கள் பதற்றம் அடைந்தனர். ரஜினி ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்தவர் என்பதால், அவருடைய உடல்நிலை பற்றி மாறுப்பட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், 29-ஆம் தேதியன்று ரஜினி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்தது.

அதில், “நடிகர் ரஜினிகாந்த் தலைசுற்றலோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பு தற்போது சரி செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்குப் பின் ரஜினிகாந்த் உடல் நலம் தேறி வருகிறார். சிகிச்சை முடிந்து இன்னும் சில நாள்களில் வீடு திரும்புவார்.” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட தடை காரணமாக பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் ரஜினி இருந்தார் என்பது தெரிய வந்தது. இந்தச் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் கடந்த இரு நாட்களாக ரஜினி இருந்தார்.

இந்நிலையில், அவருக்கான சிகிச்சை நிறைவடைந்ததை அடுத்து, இன்று இரவு ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையிலிருந்து போயஸ்கார்டன் இல்லம் திரும்பிய அவரை பூசணிக்காய் சுற்றி திரிஷ்டி கழித்தனர். வீட்டுக்குள் ரஜினி செல்லும்போது வாசலில் இருந்த ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினரைப் பார்த்து கையசைத்தும் வணக்கம் தெரிவித்தும் உள்ளே சென்றார். இந்தச் சிகிச்சைக்குப் பிறகு ரஜினி மேலும் சில நாட்கள் வீட்டில் ஓய்வில் இருப்பார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

click me!