
அறுவை சிகிச்சை முடிந்து நேற்றிரவும் வீடு திரும்பிய ரஜினிகாந்த், தாம் நலமாக இருப்பதாகவும், பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்றும் குரல் பதிவு வெளியிட்டிருந்தார்.
இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை வாங்கிய கையோடு தமிழகம் திரும்பிய ரஜினிகாந்த், பேரக் குழந்தைகளோடு கடந்த வாரம் அண்ணாத்த திரைப்படத்தை கண்டுகளித்தார். படம் நன்றாக வந்திருப்பதாகவும், தமது பேரக் குழந்தைகளுக்கு படம் பிடித்திருப்பதாகவும் ஹூட் செயலியில் குரல்பதிவு வெளியிட்ட ரஜினிகாந்த்திற்கு கடந்த வியாழக்கிழமை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தலை சுற்றல், மயக்கம் ஏற்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிங்கப்பூரில் ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட ரஜினிகாந்தை சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்தனர். அப்போது, அவருக்கு கழுத்து பகுதி வழியாக மூளை மற்றும் முகம், இதயத்திற்கு செல்லும் இரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்திற்கு ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து மருத்துவ அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம் ரஜினிகாந்த் உடல் நலம் தேறி வருவதகவும் ஒரு சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தது.
ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் அவரது மனைவி லதா, மகள்கள் மற்றும் மருமகன் நடிகர் தனுஷ் என அனைவரும் மாறி, மாறி சென்று அவரது உடல்நலன் குறித்து கேட்டறிந்தனர். ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரைபிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரடியாக மருத்துவமனைக்கு சென்று ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
இந்தநிலையில் நேற்றிரவு திடீரென ரஜினிகாந்த் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆகி தமது இல்லத்திற்கு சென்றார். அதே ஸ்டைலுடன் கெத்தாக நடந்துசென்ற ரஜினிகாந்த்தை பார்த்ததும் ரசிகர்கள் தலைவா, தலைவா என கூச்சலிட்டனர். இதையடுத்து ஹூட் செயலியில் புகைப்படத்துடன் ஆடியோ பதிவை வெளியிட்ட ரஜினிகாந்த் தாம் நலமாக இருப்பதாக கூறினார். மேலும் தமக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும், வாழ்த்து கூறிய தலைவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்த் உடல்நலம் முழுவதும் தேறிவிட்டதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தநிலையில் ரஜினிக்கு சிகிச்சை அளித்த காவேரி மருத்துவமனையில் இருந்து இன்று அதிகாலையில் ஒரு மருத்துவக் குழு ரஜினிகாந்த்தின் வீட்டிற்கு சென்றது. அறுவை சிகிச்சை முடிந்துள்ள ரஜினிக்கு தினசரி உடல்நலத்தை பரிசோதிக்க வேண்டியது கட்டாயம். அந்த பணியை மேற்கொள்ளவே செவிலியர்கள் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்றதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.