கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் மட்டும் கொண்டாடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பழைய துறைமுக திடலில் இன்று முதல் 3 நாட்களுக்கு பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பங்கேற்கும் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் சன்னி லியோன் பங்கேற்று நடனமாடும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களை கிழித்து போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் மட்டும் கொண்டாடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பழைய துறைமுக திடலில் இன்று முதல் 3 நாட்களுக்கு பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பங்கேற்கும் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2,500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு தமிழர்களம் உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தமிழர்களம் அமைப்பின் தலைவர் கோ.அழகர் தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் கடற்கரை சாலையில் ஒன்று திரண்டு கலை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கை இழுத்து மூடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களை போலீசார் தடுப்புக் கட்டை போட்டு தடுத்தனர். ஆனால் தடுப்புக் கட்டையை தூக்கி எறிந்து கலை நிகழ்ச்சி நடைபெறும் கூட்ட அரங்கை நோக்கி போராட்டக்காரர்கள் ஓடினர்.
இதனையடுத்து போலீசார் அவர்களை தடுக்கும் போது இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து கூட்ட அரங்கிற்குள் சென்ற அவர்கள், கதவை திறந்து சென்று, நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் அமர்ந்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து அத்துமீறி போராட்டம் நடத்தியதாக கூறி போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சன்னி லியோனின் பேனர் மற்றும் போஸ்டர்களை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.