Nelson Dilipkumar : இதற்கு முன்பே ரஜினியை இயக்கியுள்ள நெல்சன்!! அட... இது எப்போ?

By Ganesh AsianetFirst Published Feb 11, 2022, 1:02 PM IST
Highlights

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் அடுத்ததாக ரஜினியின் ‘தலைவர் 169’ படத்தை இயக்க உள்ளார்.

அண்ணாத்த படம் வெளியாகிய பின் 3 மாதங்களாக தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடாமல் ரஜினி, அமைதி காத்து வந்த நிலையில், நேற்று ஒரு வழியாக அவரது 169-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் தான் ‘தலைவர் 169’ படத்தையும் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இயக்குனர் நெல்சனுக்கு அடுத்தடுத்து பிரம்மாண்ட பட வாய்ப்புகள் கிடைத்தாலும், இந்த உயரத்தை எட்ட அவர் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. விஜய் டிவி நிகழ்ச்சிகளை இயக்கி வந்த நெல்சன், கடந்த 2010-ம் ஆண்டு சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்கிற படத்தை தொடங்கினார். விறுவிறுப்பாக தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு திடீரென ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு, படமும் கைவிடப்பட்டது.

நெல்சன் இயக்கிய முதல் படமே கைவிடப்பட்டதால், அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயங்கினர். இதையடுத்து மீண்டும் விஜய் டிவிக்கே வந்த நெல்சன், ஜோடி, சூப்பர் சிங்கர், பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை டைரக்ட் செய்து வந்தார். வேட்டை மன்னன் டிராப் ஆன பின் சுமார் 7 ஆண்டுகள் பட வாய்ப்புகள் இன்றி தவித்து வந்த நெல்சனுக்கு அனிருத் மூலம் கோலமாவு கோகிலா படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட நெல்சன், முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பனான நெல்சன், அவரை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். இப்படம் கடந்தாண்டு வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 

இதையடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. இப்படத்தை மாஸாக இயக்கி முடித்துள்ள நெல்சன், அடுத்ததாக தலைவர் 169 படத்துக்காக ரஜினியுடன் இணைந்துள்ளார். ரஜினியின் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற நெல்சன் ஏற்கனவே ரஜினி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியை இயக்கி உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த திரைப்பட விருது விழா ஒன்றில் நெல்சன் இயக்குனராக பணியாற்றி இருந்தார். அந்த நிகழ்ச்சியில் ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்று இருந்தனர். அப்போது விருது விழாவில் அவர்கள் மூவரையும் இயக்கிய நெல்சன், தற்போது அவர்களுடன் தனித்தனியாக ஒரு படத்தை இயக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளதை பார்த்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

click me!